பீகார் பாஜக பாணியில் எடப்பாடியார் அறிவித்த ஒற்றை அறிவிப்பு.. சமூக வலைதளங்களில் பரபர விவாதம்
சென்னை: அந்த பக்கம் பீகார் தேர்தலில் பாஜக தேர்தல் வாக்குறுதியாக ஜெயித்தால் அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்து சர்ச்சைக்குள்ளாகி உள்ள நிலையில், இந்த பக்கம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் அனைவருக்கும் அரசு செலவில் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அறிவித்திருப்பது சமூக வலைதளத்தில் வரவேற்பு ஒருபுறம் என்றாலும், அனல் பறக்கும்விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பீகார் மக்கள் மிகவும் தெளிவானவர்கள். நிறைவேற்ற கூடிய, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கண்டறிந்துவிடுவார்கள். அவர்களை யாரும் ஏமாற்ற முடியாது. பாஜக ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி மருந்து வழங்கப்படும் என்றார்.
இதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. எதிர்க்கட்சியினர் மற்றும் சமூக வலைதளவாசிகள் பலர், மத்தியில் உள்ள பாஜக அரசு, பீகாரில் ஆட்சிக்கு வராவிட்டால் அங்கு இலவசமாக கொரோனா மருந்து தராதா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
பீகார் பாஜக பாணி
இப்படியாக ஒருபக்கம் சர்ச்சை ஓடிக்கொண்டிருக்க திடீரென பீகார் பாஜக பாணியில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்கப்பட்டதும், அனைவருக்கும் கொரோனா மருந்து அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
தடுப்பூசியை கண்டுபிடியுங்கள்
இதற்கு ஒரு பக்கம் பாராட்டுகள் வந்தாலும், சிலர் அரசியல் செய்வதாக விமர்சனமும் செய்கிறார்கள். எல்லா தடுப்பூசியும் அரசு மருத்துவமனையில் இலவசமாக தான் கொடுக்கப்படுகிறது... அதையும் சேர்த்து முதல்வர் சொல்லலாமே என்று சிலர் கூறுகின்றனர். இன்னொருவர் சரியான தடுப்பூசியை கண்டுபிடிக்கவே இல்லை அதற்குள் இவர்கள் செய்யும் அரசியல் தாங்க முடியவில்லை. .முதலில் தடுப்பூசி கண்டுபிடிக்கும் வேலையை தீவிரமாக அரசு தொடங்க வேண்டும் என்று கூறினார்.
மானிய விலையில் கொரோனா மருந்து
பீகார் பாஜக தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பு மருந்து அறிவிப்பு சர்ச்சையான நிலையில் அதற்கு பாஜக தரப்பினர் விளக்கம் அளித்துள்ளனர். கொரோனா தடுப்பு மருந்தை மத்திய அரசு மானிய விலையில் தர உள்ளது. அதை இலவசமாக தருவது என்பது மாநிலங்களின் விருப்பம். அந்த அடிப்படையில் தான் பீகார் பாஜக தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது என்றார்கள்.
எடப்படியாரின் அறிவிப்பு
இதனிடையே தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் ஆறு ஏழு மாதங்கள் உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடித்தால் இலவசமாக நாங்கள் தருவோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது என்றாலும். மருந்து இன்னமும கண்டே பிடிக்காத நிலையில் அதை இலவசமாக தருவதாக உடனே அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுகிறது. அதுவும் பீகார் சர்ச்சைக்கு நடுவே அதே பாணியில் அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.