கலக்குது பாரு ஸ்டைலு.. இது புது மெட்ரோ ரயிலு.. இலவச சேவை.. கட்டி ஏறிய மக்கள் கூட்டம்
வண்ணாரப்பேட்டை - டிஎம்எஸ் வரை இலவச மெட்ரோ பயணத்தை பயணிகள் மேற்கொண்டனர்.
சென்னை : சென்னை வண்ணாரப்பேட்டை - விமான நிலையம் இடையேயான மெட்ரோ ரயில் வழித்தடத்தில் இன்று இலவச சேவை தொடங்கப்பட்டது. இதையடுத்து ரயிலில் பயணிகள் கூட்டம் நிறைந்து வழிந்தது.
மெட்ரோ ரயில் முதல் தடத்தில் ஒரு பகுதியான வண்ணாரப்பேட்டை முதல் - டிஎம்எஸ் வரை 10கிமீ வரையிலான சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் நேற்று தொடங்கி வைத்தார்.
இதையடுத்து பயணிகளை கவரும் விதமாக நேற்று மாலை முதல் இன்று இரவு மெட்ரோ ரயிலில் பயணிகள் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு சென்னைவாசிகளை வெகுவாக ஈர்த்தது.
கோளாறு
இதையடுத்து, இன்று காலை முதலே மக்கள் ரயில்நிலையத்தில் குவிய ஆரம்பித்தனர். ஆனால், சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் 8.30 மணி முதல் 10.30 மணி வரை ரயில் நிறுத்தப்பட்டுவிட்டது.
|
பயணிகள் குவிந்தனர்
இதனால் ஆசையாக வந்த பயணிகள் சிலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பலர் ரயில் நிலையத்திலேயே காத்து கிடந்தனர். முதல்நாளே இப்படி ஆகிவிட்டதே என்று அதிருப்தியும் ஏற்பட்டது.
பரபரப்பு
எனினும் கோளாறு விரைவில் சரிசெய்யப்பட்டு, மீண்டும் ரயில் இயக்கப்பட்டது. பயணிகள் காலையிலிருந்து குவிந்தபடியே இருந்தனர். இதனால் ரயில்நிலையம் இன்று நாள் முழுவதும் பரபரப்பாகவே காணப்பட்டது.
குதூகல பயணம்
இதில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்திருந்தனர். வண்ணாரப்பேட்டை முதல் டிஎம்எஸ் வரை, ரயிலுக்குள் உட்கார இடமில்லாவிட்டாலும் ஏராளமானோர் நின்றுகொண்டே ரயில் பயணத்தை குதூகலத்துடன் ரசித்தவாறே இருந்தனர்.