இனி இலவச செருப்புக்கு பதில் ஷூ.. அமைச்சர் அறிவிப்பால் அரசுப்பள்ளி மாணவர்கள் உற்சாகம்
சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச செருப்புகளுக்கு பதிலாக, இனி இலவச ஷூக்கள் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
அரசின் இந்த அறிவிப்பால் பள்ளிகளுக்கு ஷூ போட்டு போக உள்ளதை நினைத்து, அரசுப்பள்ளி மாணவர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
செருப்புகளுக்கு பதில் இலவச ஷூக்கள் வழங்கும் திட்டத்தை நடப்பாண்டு முதலே செயல்படுத்த தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், முதல்வரின் உத்தரவுப்படி தமிழக அரசுப்பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும், இந்த ஆண்டு முதல் இலவச ஷூக்கள் வழங்கப்படும் என்றார்.
மேலும் பேசிய அமைச்சர் பள்ளி கல்வித்துறையை மேம்படுத்த தமிழக முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறார். எனவே தான் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளி மாவர்களுக்கு ஷூக்கள் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கான யூ டியூப் பாடத்திட்டம் அடுத்த மாதம் உருவாக்கப்படும். இத்திட்டம் மூலமாக வகுப்பறையில் நடத்தப்படும் பாடங்கள் யூ டியூப்பில் பதிவேற்றம் செய்யப்படும் என்றார்.
நடப்பு கல்வியாண்டில் 11, 12-ம் வகுப்பு படிக்கும் 10,40,000 மாணவா்களுக்கு இம்மாத இறுதிக்குள் லேப்டாப்கள் வழங்கப்படும் அதே போல 2017 -18-ம் ஆண்டில் 12-ம் வகுப்பு படித்த மாணவா்களுக்கு அடுத்து வரும் 3 மாதங்களுக்குள் லேப்டாப்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும் செப்டம்பர் மாத இறுதிக்குள் தமிழகத்தில் சுமார் 7,800 பள்ளிகள் ஸ்மார்ட் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்றும் தகவல் தெரிவித்தார்.