இன்றும் இலவசம்.. சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்க முண்டியடிக்கும் கூட்டம்
இன்றும் மெட்ரோவில் இலவசமாக பயணம் செய்யலாம் என கூறப்படுகிறது.
Recommended Video
சென்னை: மெட்ரோ ரயிலில் இன்றும் இலவசமாக மக்கள் பயணம் செய்யலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை டி.எம்.எஸ் - வண்ணாரப்பேட்டை இடையே புதிய வழித்தடத்தில் கடந்த 10-ம் தேதி முதல் சேவை துவங்கப்பட்டது.
சென்னை விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரை முதல் வழித்தடத்திலும், பரங்கி மலையிலிருந்து சென்னை சென்ட்ரல் வரை 2-வது வழித்தடத்திலும் என ரயில் சேவை முடிவடைந்து, 32 ரயில் நிலையங்கள் உள்ளன.
விழிப்புணர்வு
ஒவ்வொரு முறை மெட்ரோ ரயில் சேவை புதிதாக துவங்கும்போது, இலவச பயணம் என்ற அறிவிப்பை வெளியிடும். அதுபோலேவே இந்த முறையும், பயணிகளை கவரும் விதமாகவும், பொதுமக்களிடையே மெட்ரோ ரயில் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் கடந்த 3 தினங்களாக மெட்ரோ ரயிலில் பயணிகள் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
குழந்தைகள்
இந்த அறிவிப்பு சென்னைவாசிகளை வெகுவாக ஈர்த்தது. இதனால் 3 நாட்களாகவே மெட்ரோ நிலையங்களிலும் கூட்டம் நிறைந்து வழிந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் என ஏராளமானோர் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டினர்.
4-வது நாள்
இந்த 3 நாளில் மட்டும் இலவசமாக பயணம் செய்தவர்கள் 3 லட்சம் பேருக்கு மேல் என கூறப்படுகிறது. மக்களின் இந்த ஆர்வத்தை கண்ட மெட்ரோ நிர்வாகம், இன்றும் அதாவது 4-வது நாளாக மெட்ரோ ரயிலில் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
மக்கள் கூட்டம்
இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு மீண்டும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இப்போதே மெட்ரோ ரயில் நிலையங்களில் மக்கள் தலை தென்பட ஆரம்பித்துள்ளது.