அத்துமீறுகிறதா பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்...? நிஜக் காவலர்களும் நிழல் காவலர்களும் ஒன்றா...?
சென்னை: காவல்துறையினருக்கு உதவிக்கரமாக இருப்பதற்கு கொண்டு வரப்பட்ட பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்ற திட்டம் இப்போது உபத்திரவமாக மாறியுள்ளது.
நிஜக் காவலர்களை போல் தங்களை பாவித்துக்கொள்ளும் நிழல் காவலர்களான இந்த பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழு, பொதுமக்களிடம் உருட்டல், மிரட்டலில் ஈடுபடுவதை இந்த லாக்டவுன் காலத்தில் கண்கூடாக பார்க்க முடிகிறது.
பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவில் உள்ளவர்கள் லத்தியை கையில் பிடிக்கவே சட்டத்தில் இடமில்லாத போது அதைக் கொண்டு தாக்குதலில் ஈடுபடுவது எந்த வகையில் நியாயம் எனக் கேட்கிறார் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பரந்தாமன்.
சாத்தான்குளம் தந்தை மகன் மரணம்.. பேஸ்புக்கில் சர்ச்சைப் பதிவு போட்ட போலீஸ்காரர்.. அதிரடி சஸ்பென்ட்!
காவல்துறையினருக்கு உதவி
காவல்துறையினருக்கு உதவிக்கரமாக இருப்பதற்காக போலீஸ் நண்பர்கள் குழு (friends of police) உருவாக்கப்பட்ட நிலையில், அது தொடங்கப்பட்டதன் நோக்கம் திசை மாறிச் செல்லத் தொடங்கியுள்ளது. போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதிகளில் காவல்துறையினருடன் இணைந்து போக்குவரத்தை சீர் செய்வது, 50 வயதுக்கு மேல் உள்ள காவலர்கள் ரோந்து செல்லும் போது அவர்களுக்கு உதவியாக, துணையாக செல்வது, திருவிழாக் காலங்களில் கண்காணிபு பணிகளில் ஈடுபடுவது என்பன போன்ற நல்ல நோக்கங்களுக்காக போலீஸ் நண்பர்கள் குழு (friends of police)ஏற்படுத்தப்பட்டது.
அத்துமீறுதல்
இந்த குழுவில் ஏராளமான இளைஞர்கள் தன்னார்வமாக இணையத்தொடங்கினர். அதிலும் குறிப்பாக போலீஸாக வேண்டும் நினைத்து ஆக முடியாமல் போன நூற்றுக்கணக்கானோர் ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் குழுவில் இணைந்துள்ளனர். நிழல் காவலர்களான இவர்கள் கால ஓட்டத்தில் தங்களை நிஜப் போலீஸாகவே கருதத் தொடங்கினர். ஐ.பி.எஸ். அதிகாரிகளே மக்களிடம் கனிவுடன் நடந்துகொள்ளும் சூழலில் இவர்கள் தங்கள் உருட்டல், மிரட்டலை வெளிப்படுத்த தொடங்கினர்.
பல பிரச்சனைகள்
லாக்டவுனுக்கு முன்பு வரை ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் பற்றி பொதுமக்களுக்கு அவ்வளவாக தெரியாது. ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில், குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் இந்த ப்ரண்ட்ஸ் ஆஃப் குழு போட்ட ஆட்டத்திற்கு அளவில்லை. கண்ணில் தென்படுகிறவர்களை, யோவ், போய்யா வாய்யா ; வாடா, போடா, என ஒருமையில் வசைபாடி வம்பை விலைக்கு வாங்கத் தொடங்கினர். இவர்களுக்கு பயந்து செல்கிறவர்களும் உண்டு, இவர்களிடம் பாய்ந்து புரள்பவர்களும் உண்டு. ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் செய்யும் தவறுகளால் காவல்துறையினருக்கு தான் தலைவலியும் அவப்பெயரும்.
லத்தியை எப்படி பிடிக்கலாம்?
இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஐ.பரந்தாமனிடம் பேசினோம், '' ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் குழுவில் உள்ளவர்கள் லத்தியை பிடிக்கவே சட்டத்தில் இடமில்லை. அப்படியிருக்கும் போது இவர்கள் தாக்குதலில் ஈடுபடுவது எந்த வகையிலும் நியாயம் இல்லை. ஆர்வக்கோளாறில் சினிமா படங்களை பார்த்துவிட்டு சிலர் செய்யும் பைத்தியகாரத்தனத்தால் பல இடங்களில் பிரச்சனைகள் உருவாகின்றன. மக்களை சீண்டினால் அவர்கள் வேடிக்கை பார்க்கமாட்டார்கள் என்பதை ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் குழுவில் உள்ளவர்கள் உணரவேண்டும், இல்லையென்றால் அவர்களுக்கு அந்த அங்கீகாரத்தை வழங்கிய காவல் அதிகாரிகள் உணர்த்த வேண்டும்'' என்கிறார்.