பிளாஸ்டிக் தடை எதிரொலி… டாஸ்மாக் பாரில் மதுபிரியர்களுக்கு இனி நுழைவுக் கட்டணம்
சென்னை: பிளாஸ்டிக் தடை நாளை முதல் அமலுக்கு வர உள்ள நிலையில் மதுப்ரியர்களுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருக்கிறது. வருமானத்தை ஈடுகட்டும் வகையில் கடைக்கு வரும் மதுபிரியர்களிடம் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப் பட உள்ளது.
தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் தடை வருகின்ற நாளை முதல் அமலுக்கு வருகிறது. பிளாஸ்டிக் பொருட்களுக்கு இனி தடை விதிக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தது போல் தடை அமலுக்கு வருகிறது.
பிளாஸ்டிக் பை, பிளாஸ்டிக் கப், டம்ப்ளர் போன்ற 14 பொருட்கள் தடை விதிக்கப் பட்டுள்ளன. இந்நிலையில் டாஸ்மாக் பார்களில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கப், பிளாஸ்டிக் டம்ளர், தண்ணீர் பாக்கெட் ஆகிய அனைத்திருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாற்றாக கண்ணாடியால் ஆன அல்லது எவர்சில்வர் டம்ளர் உபயோகப்படுத்தலாம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
உத்தரவை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் டாஸ்மாக் பார் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது. தமிழக அரசு தடை செய்துள்ள பொருட்களில் பிளாஸ்டிக் கப், தண்ணீர் பாக்கெட் ஆகியவைகளும் அடங்கியுள்ளதால் டாஸ்மாக் பார்களின் நாளை முதல் பார்களில் இவைகளை விற்பனை செய்ய முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
அதனால் டாஸ்மாக் பார்களின் வருமானம் பெருமளவு குறையும் என்பதால் இதனை ஈடுகட்ட புதிய வழி ஒன்றை டாஸ்மாக் நிர்வாகம் கையில் எடுத்துள்ளது. அதன்படி, நாளை முதல் டாஸ்மாக் பார்களில் நுழைவுக் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பார்களின் வசதியை பொருத்து ரூ.10 முதல் ரூ.20 வரை பார் உரிமையாளர்கள் வசூல் செய்து கொள்ளலாம் என டாஸ்மாக் அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.