சமையல் எண்ணெய் இனி பாக்கெட்களில் மட்டுமே... ஜூன் 1-ம் தேதி முதல் சில்லறையாக வாங்க முடியாது
சென்னை: சமையல் எண்ணெயை ஜூன் 1-ம் தேதி முதல் பாக்கெட்களில் மட்டுமே விற்க வேண்டும் என்றும், சில்லறையாக விற்க கூடாது எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சமையல் எண்ணெயில் கலப்படம் தொடர்பான புகார்கள் உணவு பாதுகாப்புத் துறைக்கு குவிந்ததால் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது தமிழக அரசு. தற்போது கிராமப்புறங்கள் மற்றும் நகரங்களில் உள்ள ஆயில் ஸ்டோர்களில் சமையல் எண்ணெய், நல்லெண்ணெய் உள்ளிட்ட எண்ணெய்கள் தேவைப்படுவோருக்கு சில்லறையாக விற்கபடுகின்றன.
ஒரு லிட்டர் எண்ணெய் வாங்க முடியாதோர் தங்கள் பாத்திரத்தை எடுத்து சென்று 200 மி.லி., 300 மி.லி. என்று தங்கள் வசதிக்கேற்றவாறு ஆயில் ஸ்டோர்களிலும், மளிகைக்கடைகளிலும் எண்ணெய் வாங்கி செல்வார்கள். இப்போது இந்த நடைமுறை ஜூன் 1-ம் தேதியோடு முடிவுக்கு வருகிறது. இதற்கு எண்ணெய் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
திருமணத்துக்கு சேர்த்து வைத்த பணத்தில்... ஏழைகளுக்கு உணவு வழங்கிய ஆட்டோ ஓட்டுநர்
தமிழக அரசு உத்தரவுப்படி இனி சமையல் எண்ணெய் வகைகளை பாக்கெட்களில் அடைத்து, சீலிட்டு விற்பனை செய்ய வேண்டும். இதன்மூலம் கலப்படம் மற்றும் போலி தயாரிப்புகளை ஒழிக்க முடியும் என்பது உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளின் நம்பிக்கையாக உள்ளது. ஆனால் இந்த நடவடிக்கை சிறு வணிகர்களை பாதிக்கும் என்றும், அனைவராலும் பேக்கேஜிங் உரிமம் வாங்க முடியாது எனவும் எண்ணெய் விற்பனையாளர்கள் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
பழைய முறைப்படி மீண்டும் செக்கு மூலம் எண்ணெய் உற்பத்தி செய்யும் தொழில் தமிழகத்தில் பரவலாக அதிகரித்து வரும் நிலையில், அதனை அடியோடு இந்த உத்தரவு பாதிக்கச்செய்யும் என்பதும் அவர்களின் வாதமாக உள்ளது. இதனிடையே பொதுமக்களின் நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும், எண்ணெய் பாக்கெட்களை இனி 250 மி.லி. , 500 மி.லி. என்ற அளவில் கூட பேக் செய்து வாங்குவோரின் வசதிக்கேற்ப விற்பனை செய்ய எண்ணெய் உற்பத்தியாளர் முன்வர வேண்டும் என உணவுப் பாதுகாப்பு துறை கேட்டுக்கொண்டுள்ளது.