என்ட் கார்டு போட்ட டிக்டாக்.. கூகுள் பிளே ஸ்டோரிலும் தூக்கியாச்சு.. ஆப்பும் ஓப்பன் ஆகவில்லை
சென்னை: டிக் டாக் உட்பட சீன நாட்டைச் சேர்ந்த 59 செயலிகளுக்கு மத்திய அரசு நேற்று தடை விதித்தது. இதையடுத்து கூகுள் பிளே ஸ்டோர் அந்த செயலியை நீக்கியுள்ளது.
Recommended Video
எப்போது முதல் டிக்டாக் செயலியை இந்தியாவில் பயன்படுத்த முடியாமல் போகும்? தற்போது டவுன்லோட் செய்து வைத்துள்ள ஆப் நிலைமை என்ன? என்பது குறித்து பல்வேறு சந்தேகங்கள் மக்களிடம் எழுந்துள்ளன.
இந்த சந்தேகங்களுக்கு தீர்வு காணக் கூடிய விளக்கங்களை பார்ப்போம் வாருங்கள். மத்திய அரசு தடை செய்வதாக அறிவித்துள்ள 59 செயலிகளில் மிகவும் புகழ்பெற்றது டிக்டாக்.
டிக்டாக் ஐ நீக்கிட்டாங்க... இனி கூகுள் ப்ளேஸ்டோர், ஆப்பிள் ஆப்ல தேடினாலும் கிடைக்காது
12 கோடி பயனாளர்கள்
இந்தியாவில் சுமார் 12 கோடி பேர் டிக் டாக் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். தினமும், சராசரியாக, சுமார் 40 நிமிடங்கள், அவர்கள் டிக் டாக் செயலியில் செலவிடுகிறார்கள் என்கிறது ஒரு புள்ளி விவரம். சில செயலிகள் மட்டும்தான் படிக்காத பாமர மக்களின் செல்போன்களிலும் இடம்பெற்றிருக்கும். அப்படியான ஒரு செல்போன் ஆப் டிக்டாக்.
சீனாவுக்கு ரகசியங்களை சொல்வது இல்லை
இந்த நிலையில்தான், மத்திய அரசின் உத்தரவை தொடர்ந்து கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து டிக் டாக் செயலி நீக்கப்பட்டுள்ளது. டிக்டாக் இந்தியா நிறுவனம் இது தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், மத்திய அரசின் உத்தரவுக்கு எங்கள் நிறுவனம் கீழ்படியும். அதேநேரம், இதுதொடர்பாக விளக்கம் அளிப்பதற்கு அரசுடன் சந்திப்பு நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டேட்டா ரகசியம், பாதுகாப்பு விஷயங்கள் உள்ளிட்டவற்றில் டிக்டாக் தொடர்ந்து ரகசியத்தை காக்கும். எங்களது பயனாளரின் எந்த ஒரு விவரத்தையும் இந்தியா அல்லது சீன அரசு உள்ளிட்ட வெளிநாட்டு அரசுகளுக்கு பகிர்ந்துகொண்டது கிடையாது.
முதல் முறை பயனாளர்கள்
14 இந்திய மொழிகளில் கிடைக்கும் வகையில் டிக்டாக் செயல்பாடுகளை ஏற்பாடு செய்துள்ளோம். கலைஞர்கள், கதை சொல்லிகள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பலரும் இதன் வழியாக மக்களை இணைத்து வருகிறார்கள். இதில் பலரும் முதல் முறையாக இணையத்தை பயன்படுத்துபவர்கள். இவ்வாறு டிக் டாக் இந்தியாவின் தலைவர் நிகில் காந்தி தெரிவித்துள்ளார்.
முடங்கியது
கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து டிக் டாக் நீக்கப்பட்டாலும்கூட ஏற்கனவே அதை டவுன்லோட் செய்து வைத்துள்ளோர்கள், தொடர்ந்து அதைப் பார்க்க முடியும், டவுன்லோடுதான் செய்ய முடியாது என்று தகவல் வெளியானது. ஆனால், இன்று மாலை முதல், ஆப் ஓபன் ஆகவில்லை. அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதால், அரசு சொற்படி நல்ல பிள்ளைபோல கேட்டு நடந்து கொள்வது நல்லது என்று நினைத்து ஆப்பை முடக்கி வைத்திருக்கலாம் டிக்டாக் நிர்வாகம் என தெரிகிறது.
ஏற்கனவே தடை
மேலும், டிக் டாக் தடை செய்யப்படுவது இது முதல் முறை கிடையாது. ஆபாச வீடியோக்களை காட்டுவதாக கூறியும், தனிநபர் ரகசியங்களை காப்பாற்றவில்லை என்று கூறியும் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் ஆகியவை சில நாட்கள் அவற்றை பிளாக் செய்து வைத்திருந்தன. இந்த முறை எந்த மாதிரியான தடை இருக்கும் என்பது குறித்து அரசு இன்னும் விளக்கமாக தெரிவிக்கவில்லை.