பெட்ரோல், டீசல் விலை 44ஆவது நாளாக இன்றும் மாற்றமில்லை... கேஸ் விலை உயர்ந்து போச்சே
பெட்ரோல், டீசல் விலை இன்றும் மாற்றமின்றி விற்பனையாகிறது. சமையல் கேஸ் விலை உயர்ந்துள்ளது. விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னை: சென்னையில் இன்றைய தினம் ஒருலிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் 85 காசுகளுக்கும், டீசல் 100 ரூபாய் 94 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. 44 வது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையாகிறது. விலையை குறைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, ஒருசில மாதங்கள் வரை பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது. பின்னர் படிப்படியாக விலை உயர்ந்தது ஒரு லிட்டர் பெட்ரோல் 85 ரூபாயை எட்டியது. எதிர்கட்சியினரின் போராட்டம், பீகார் மாநில தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் டீசல் விலை மீண்டும் மெதுவாக உயர்ந்தது. ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் வரை விற்பனையானது. டீசல் 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. தமிழக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பால் பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைக்கப்பட்டது.
பெட்ரோல், டீசல் விலையில் 43வது நாளாக இன்றும் மாற்றம் இல்லை.. இன்றைய நிலவரம் என்ன?
மத்திய அரசு
தீபாவளி பண்டிகையையொட்டி பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது.
பெட்ரோல் மீதான கலால் வரி 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததால் பெட்ரோல், டீசல் விலை குறைந்தது. பாஜக ஆளும் மாநிலங்களில், அந்தந்த மாநில அரசுகளும் வரியை குறைத்ததால் பெட்ரோல்- டீசல் விலை கணிசமாக குறைந்தது.
அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலை
கடந்த நவம்பர் மாதம் முதல் பெட்ரோல்,டீசல் உயர்த்தப்படாமல் விற்பனை செய்யப்பட்டன. பஞ்சாப், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா,மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் பெட்ரோல், டீசல் விலைகள் படிப்படியாக உயர்த்தப்பட்டு வருகின்றன. எரிபொருட்களின் விலை அதிகரித்ததால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்து வருகின்றது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து, சென்னையில் 110.85 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து 100.94 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
44வது நாளாக மாற்றமில்லை
இந்நிலையில், தொடர்ந்து 44வது நாளாக சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. அதன்படி, ஒருலிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் 85 காசுகளுக்கும், டீசல் 100 ரூபாய் 94 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் டீசல் விலை உயராதது மன நிம்மதியை அளித்தாலும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர்.
கேஸ் சிலிண்டர் விலை உயர்வு
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை நேற்று 3 ரூபாய் 50 காசுகள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை அடுத்து சமையல் எரிவாயு சிலிண்டர்விலை 1000 ரூபாயை தாண்டியுள்ளது. வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை உயர்வை அடுத்து, இன்று முதல் டெல்லி மற்றும் மும்பையில் 14.2 கிலோ வீட்டு உபயோகத்திற்கான எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.1003 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.1029 ஆகவும், சென்னையில் ரூ.1018.5 ஆகவும் உயர்ந்துள்ளது.
விலை குறையுமா?
வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டரின் விலையும் ரூ.8 உயர்ந்துள்ளது. இன்று முதல் டெல்லியில் 19 கிலோ சிலிண்டர் விலை ரூ.2354 என்ற விலையிலும், கொல்கத்தாவில் ரூ.2454 என்ற விலையிலும், மும்பையில் ரூ.2306 என்ற விலையிலும், சென்னையில் ரூ.2507 என்ற விலையிலும் கிடைக்கும். மே 7 ஆம் தேதி, வணிக எரிவாயு சிலிண்டர் விலை 10 ரூபாய் குறைந்த நிலையில் நேற்று உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையும், வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலையும் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர். பெட்ரோல் டீசல் விலையையும், கேஸ் சிலிண்டர் விலையையும் குறைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.