பெட்ரோல், டீசல் விலை.. இறங்குச்சு.. இப்ப மறுபடியும் ஏறுது.. இது நல்லதுக்கு இல்லையே!
பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை: தொடர்ந்து ஏறி வரும் பெட்ரோல் டீசல் விலையை கண்டு வாகன ஓட்டிகள் உட்பட பொதுமக்களும் அதிர்ந்து உள்ளனர்.
இரு மாதங்களுக்கு முன்புவரை இதுதான் உச்சம் என்று முடிவு தெரியாத வரை பெட்ரோல்-டீசல் விலை உயர்ந்து காணப்பட்டது. இதற்கான போராட்டங்களை மாநிலங்கள் முதல் பாரத் பந்த் வரை நடத்தியும் மத்திய அரசு அசைந்து கொடுக்கவில்லை.
இதற்கு காரணத்தை கேட்டால், நாங்களா விலை ஏற்றுகிறோம், சர்வதேச எண்ணெய் நிறுவனங்கள்தான் இதற்கெல்லாம் காரணம் என நழுவி கொண்டது மத்திய அரசு.
ஆனால் 5 மாநில தேர்தல் சமயங்களில் இறங்குமுகமாக பெட்ரோல், டீசல் விலை இருந்ததற்கு காரணம் யார் என்று மட்டும் இதுவரை தெரியவில்லை. இதெல்லாம் நம்பலாமா? நம்பப்படாதா? என்ற ரீதியில் பெட்ரோல், டீசல் விலை குறைந்து கொண்டே போனது.
இதெல்லாம் இன்னும் எத்தனை நாளைக்கு என்று மக்கள் தெளிவாக தான் இருந்தார்கள். அதன்படியே இப்போது விலை உயர்ந்து வருகிறது. அதாவது 5 மாநில தேர்தல் முடிவுகள் வந்து 57 நாட்கள் ஆகிவிட்ட பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக விலையில் ஏற்றம் வந்துள்ளது.
இன்று ஒரு லிட்டர் 73.85 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் 69.41 ஆகவும் விற்பனையில் உள்ளது. சுருக்கமாக சொல்லப்போனால், கடந்த 10 நாட்களில் மட்டும் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.2.79 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.3.40 ஆகவும் அதிகரித்துள்ளது.
ஒன்றரை மாதமாக பெட்ரோல், டீசல் விலையை குறைத்தும், அதன்பிறகு மெல்ல மெல்ல உயர்த்தியும் பொது மக்களுக்கு கொதிப்பு கலந்த கலக்கத்தை ஏற்படுத்தி வருவது நடுவண் அரசுக்கு நல்லதுக்கு இல்லை என்று மட்டும் ரொம்ப தெளிவாக தெரிகிறது.