முழு ஊரடங்கு அறிவித்த 6வது மாவட்டம்.. இன்று மாலை முதல் தேனி மாவட்டத்தில் முழு லாக்டவுன்.. அதிரடி
சென்னை: தேனி மாவட்ட நகர்ப்பகுதிகளில் ஜூன் 24ம் தேதியான இன்று மாலை 6 மணியிலிருந்து மறு அறிவிப்பு வெளியாகும் வரை முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருவதாக ஆட்சியர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.
போடிநாயக்கனூர், கம்பம், பெரியகுளம், கூடலூர், சின்னமனூர் மற்றும் தேனி நகராட்சிகளில் நாளை முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது.
மாலை 6 மணி முதல் மறு உத்தரவு வெளியாகும் வரை முழு பொது முடக்கம் தொடரும் என்று நேற்று மாலை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டி சிறையில் இருவர் மரணம்: வணிகர்கள் கடையடைப்பு - அரசு வேலை தர கோரிக்கை
கன்டெயின்ட்மென்ட் பகுதி
கட்டுப்பாட்டு மையங்களில், இறைச்சி கடைகள் இயங்குவதற்கு அனுமதி கிடையாது. டீக் கடை, பேக்கரி, நகைக்கடை, ஜவுளிக்கடை, பாத்திரக்கடை இயங்க அனுமதி கிடையாது. மளிகை, காய்கறி கடைகள், பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்படும்.
உணவகங்கள்
உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சல் சேவையுடன் மட்டுமே அனுமதிக்கப்படும். மருத்துவ சேவைக்கு மட்டும் ஆட்டோ, டாக்சி தனியார் வாகனங்கள் இயங்க அனுமதிக்கப்படும். நாளை முதல், பொது பேருந்து சேவையும் பாதியாக குறைக்கப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.
எவையெல்லாம் முழு ஊரடங்கு மாவட்டங்கள்
ஏற்கனவே, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் ஜூன் 19ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதை அடுத்து ஜூன் 23ம் தேதி இன்று நள்ளிரவு 12 மணி முதல், மதுரை மாவட்டத்தில் ஜூன் 30-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. தற்போது இந்தப் பட்டியலில் தேனி மாவட்டம் இணைந்துள்ளது.
பிற மாவட்டங்கள்
இதேபோல, தூத்துக்குடி, திருவண்ணாமலை போன்ற கொரோனா பரவல் வேகமாக இருக்கக்கூடிய, பிற மாவட்டங்களிலும், முழு ஊரடங்கு அமலுக்கு வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், நாளை அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன், முதல்வர் அவசர ஆலோசனை நடத்துகிறார்.