தீயாய் பரவும் கொரோனா.. மதுரையில் மீண்டும் லாக்டவுன்.. மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு.. முதல்வர் அதிரடி!
சென்னை: மதுரையில் கொரோனாவின் பரவல் இன்னும் குறையவில்லை.. மதுரையில் மேலும் ஒரு வாரத்துக்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.. வரும் 6ம் தேதி முதல் 12ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று தமிழக முதல்வர் பழனிச்சாமி அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொற்று பரவல் உச்சமாக உள்ளது. அதனால், இந்த மாவட்டங்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அது அமலிலும் உள்ளது.
இந்நிலையில், சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் மதுரைக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்தது. அதனால் கடந்த சில நாட்களாகவே மதுரையில் தொற்று பாதிப்பு அதிகரித்து வந்தது.. மற்றொரு பக்கம், எம்பி வெங்கடேசனும், மதுரையில் நிறைய டெஸ்ட்கள் எடுக்கப்படவில்லை.. அதனால் டெஸ்ட்களை அதிகப்படுத்த வேண்டும் விடாமல் கோரிக்கை விடுத்து வந்தார்.
வாகன ஓட்டிகளே.. தமிழகத்தில் நாளை பெட்ரோல் பங்க்குகள் இயங்காது.. இப்பவே ஃபில் செய்யுங்க!
அதிரடிகள்
இதனிடையே, மதுரை மாவட்டத்தில் பரிசோதனைகள் அதிகமாயின.. அப்போது, தொற்று அதிகமாகவே இருப்பது கண்டறியப்பட்டது.. இதையடுத்து, ஒரு வாரத்துக்கான முழு ஊரடங்கையும் அரசு அதிரடியாக பிறப்பித்தது.. அதனடிப்படையில், கடந்த 24-ந் தேதி முதல் 7 நாட்களுக்கு முழு லாக்டவுன் அமலில் உள்ளது.. இந்த லாக்டவுனால் மதுரை மாநகராட்சி பகுதிகள் ஒட்டுமொத்தமாக முடங்கிப் போய் வெறிச்சோடி காணப்பட்டு வருகிறது.
நீட்டிப்பு
இந்நிலையில், மதுரையில் மேலும் ஒரு வாரத்துக்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.. வரும் 6ம் தேதி முதல் 12ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று தமிழக முதல்வர் பழனிச்சாமி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இது சம்பந்தமாக முதலமைச்சர் அறிக்கையும் விடுத்துள்ளார். அதில் அவர் சொல்லி உள்ளதாவது:
லாக்டவுன்
"இந்த முழு ஊரடங்கின்போது நோய்த்தொற்று குறைந்திருப்பினும், முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக இந்த முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறது. மதுரை மாவட்டத்தில், மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளிலும் மேலும் 7 நாட்களுக்கு, அதாவது 6.7.2020 அதிகாலை 0.00 மணி முதல் ஜூலை 12 நள்ளிரவு 12.00 மணி வரை பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005-ன்கீழ் நீட்டிக்க உத்தரவிட்டுள்ளேன்.
அத்தியாவசிய பணிகள்
இந்த முழு ஊரடங்கு உத்தரவு காலத்தில் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள அத்தியாவசிய பணிகள் மட்டும் அனுமதிக்கப்படும். கட்டுப்பாட்டுப் பகுதிகளில், எந்தவிதமான செயல்பாடுகளும் அனுமதிக்கப்பட மாட்டாது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் காலத்தில் இது மிகவும் தீவிரமாக்கப்பட்டு கண்காணிக்கப்படும்.
முக கவசம்
அரசு ஊரடங்கை அமல்படுத்தினாலும், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும், மக்களின் ஒத்துழைப்பு இல்லையென்றால், இந்த நோய் பரவலை தடுக்க இயலாது. பொதுமக்கள் வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்து, அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால் தான், இந்த நோய்த் தொற்றை கட்டுப்படுத்த முடியும்" என்று தெரிவித்துள்ளார்.
ஒத்துழைப்பு
கடந்த முறை லாக்டவுனில், மளிகை சாமான்களை வாங்கக்கூட வண்டிகளில் பொதுமக்கள் வரக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது குறிப்பிட்ட நேரத்தில் விற்கலாம் என்று உத்தரவிட்டுள்ளது மக்களுக்கு சற்று நிம்மதியை தந்துள்ளது. இதனால் மக்கள் முண்டியடித்து கொண்டு பொருட்களை வாங்க வேண்டிய அவசியம் இருக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.