தமிழகத்தில் இன்று முதல் முழு ஊரடங்கு... என்ன கட்டுப்பாடுகள்? யாருக்கெல்லாம் அனுமதி? முழு விவரம்
சென்னை: தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 30,000 நெருங்கும் நிலையில், மாநிலத்தில் இன்று முதல் வரும் மே 24ஆம் தேதி தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் 2ஆம் அலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 28,897 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு.. கொரோனா பணியிலிருந்து விலக்கு.. சேலம் டீன் சபாஷ் உத்தரவு
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் இன்று முதல் வரும் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை நான்கு மணிக்கு இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது.
மளிகைக் கடைகளுக்கு நேரக்கட்டுப்பாடு
வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கும் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இவை தவிர, தனியாகச் செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் குளிர்சாதன வசதி இன்றி நண்பகல் 12.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. இவற்றில், ஒரே சமயத்தில் 50 சதவிகிதம் வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்படுகிறது.
ஹோட்டல்களில் பார்சல் மட்டும் அனுமதி
அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும். தேநீர்க் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். உணவகங்கள் மற்றும் தேநீர்க்கடைகளில் உட்கார்ந்து உண்பதற்கு அனுமதியில்லை. விடுதிகளில் தங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் தங்கியுள்ள அறைகளிலேயே உணவு வழங்க வேண்டும். உணவுக் கூடங்களில் அமர்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை. தங்கும் விடுதிகள் செயல்பட அனுமதி இல்லை. எனினும், வணிக காரணங்களுக்காகத் தங்கும் வாடிக்கையாளர்களுக்காகவும், மருத்துவம் சார்ந்த பணிகளுக்கு மட்டும் தங்கும் விடுதிகள் செயல்பட அனுமதிக்கப்படும்.
Array
மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளதால், இதற்கான தடை தொடரும். வெளிநாடுகள் மற்றும் இதர மாநிலங்களிலிருந்து விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து மூலம் வரும் பயணியர்களைத் தொடர்ந்து கண்காணிக்க இ-பதிவு முறை தொடர்ந்து செயல்படுத்தப்படும். ரயில் மற்றும் விமான நிலையங்களுக்குப் பயணிகள் சென்று வர, பயணச் சீட்டுடன் அனுமதிக்கப்படும்.
பொதுப் போக்குவரத்துக்குத் தடை
மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கிடையேயான தனியார், அரசு பேருந்து போக்குவரத்து மற்றும் வாடகை டாக்ஸி, ஆட்டோக்கள் ஆகியவற்றிற்குத் தடை விதிக்கப்படுகிறது. அத்தியாவசியப் பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, நேர்முகத் தேர்வு/வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கும், மருத்துவமனை செல்வதற்கும் உரிய ஆவணங்களுடன் பயணிப்பவர்கள் அனுமதிக்கப்படுவர். இ பாஸ் தேவையில்லை என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகள்
முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட மாட்டாது. உள் அரங்கங்கள் மற்றும் திறந்த வெளியில், சமுதாயம், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் இதர விழாக்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது. மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அழகு நிலையங்கள், முடிதிருத்தும் கடைகள் இயங்க தடை விதிக்கப்படுகிறது. ஏற்கனவே அறிவித்தபடி, இறப்பு சார்ந்த நிகழ்வுகளில், இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 20 நபர்களுக்கு மேல் அனுமதி இல்லை.
யாருக்கு விலக்கு
அத்தியாவசிய துறைகளான, தலைமைச் செயலகம், மருத்துவத்துறை, வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மை, காவல் துறை, ஊர்காவல் படை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைத்துறை, மாவட்ட நிருவாகம், மாவட்ட தொழில் மையங்கள், மின்சாரம், குடிநீர், உள்ளாட்சித் துறைகள், வனத்துறை அலுவலகங்கள், கருவூலங்கள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அலுவலகங்கள் தவிர, மாநில அரசு அலுவலகங்கள் எதுவும் இயங்காது. துறைத் தலைவர்கள் பணியாளர்களுக்குத் தேவையான போக்குவரத்து வசதி செய்து
தர வேண்டும். இந்தக் கட்டுப்பாடுகள் மத்திய அரசு அலுவலகங்களுக்கும் பொருந்தும்.
Array
பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள், கோடைக்கால முகாம்கள் ஆகியவை இயங்க அனுமதி இல்லை. நீச்சல் குளங்கள், விளையாட்டு பயிற்சி சங்கம் / குழுமங்கள் செயல்பட அனுமதி இல்லை. முழு ஊரடங்கின் போது உணவு விநியோகம், மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விநியோகம் செய்யும் மின் வணிக நிறுவனங்கள் தவிர மற்ற மின் வணிக நிறுவனங்களின் சேவைகளுக்கு அனுமதி இல்லை.
தனியார் நிறுவனங்கள்
அனைத்து தனியார் அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில் நுட்ப சேவை நிறுவனங்கள் இயங்க தடை விதிக்கப்படுகிறது. விதி விலக்கு அளிக்கப்பட்ட தொழிற்சாலைகள் தவிரப் பிற தொழிற்சாலைகள் இயங்க தடை விதிக்கப்படுகிறது. வீட்டிலிருந்தபடி பணியாற்றும் முறையை அவை பின்பற்றலாம் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்கள் வழிபாட்டிற்கு அனுமதி இல்லை. எனினும், தினமும் நடைபெறும் பூஜைகள் / பிரார்த்தனைகள் / சடங்குகளை, வழிபாட்டுத் தல ஊழியர்கள் மூலம் நடத்துவதற்குத் தடையில்லை. குடமுழுக்கு மற்றும் திருவிழா நடத்த அனுமதி இல்லை.
சுற்றுலாத் தலங்கள்
நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்து சுற்றுலாத் தலங்களுக்கு, உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் செல்ல அனைத்து நாட்களிலும் தடை விதிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடற்கரை பகுதிகளிலும், அனைத்து நாட்களிலும், பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள் மற்றும் தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள், அகழ் வைப்பகங்கள் மற்றும் அருங்காட்சியகங்களுக்கு அனைத்து நாட்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.