சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கு அமலாகிறதா? முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதில்
சென்னை: சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கு அமலப்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று பதிலளித்தார்.
கொரானா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கிண்டியில் பிரத்தியேக கொரோனா மருத்துவமனை பிரிவு இன்று திறந்து வைக்கப்பட்டது.
கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டில் இந்த மருத்துவமனை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு நிருபர்களிடம் எடப்பாடி பழனிச்சாமி அளித்த பேட்டியில் கூறியதாவது:
சென்னையில் கொரோனா சிறப்பு மருத்துவமனை திறப்பு.. எய்ம்சுக்கு இணையான வசதிகள் உள்ளன- முதல்வர் தகவல்
சென்னை ஊரடங்கு பலன்
சென்னையில் கொரானா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே இருக்கிறது. முழு ஊரடங்கு உத்தரவால் பலன் கிடைத்துள்ளது. மற்ற மாவட்டங்களில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்று பத்திரிக்கையாளர்கள் குறிப்பிட்டு கேட்கிறீர்கள். 210 நாடுகளில் இந்த நோய் பரவியுள்ளது. பரவலை குறைப்பதற்கு நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறோம். மக்கள்தான் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மக்களுடைய முழு ஒத்துழைப்பு இருந்தால்தான் நோய் பாதிப்பை குறைக்க முடியும். அரசு காட்டும் வழிமுறைகளை எந்த அளவு மக்கள் பின்பற்றி நடக்கிறார்களோ அந்த அளவுக்கு நோய் பாதிப்பு குறையும் என்றார்.
தமிழகத்தில் சமூக பரவல் இல்லை
தமிழகத்தில் கொரோனா சமூக பரவல் உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த முதல்வர், நான் அடிக்கடி கூறும் பதில்தான். பத்திரிகையாளர்கள் அனைவரும் இப்போது வந்துள்ளீர்கள். உங்கள் அனைவருக்கும் கொரோனா பரவி இருந்தால்தான் அது சமூக பரவல். இப்போது, நோய் யாருக்கு இருக்கிறதோ அவர்கள் யார் யாரை தொடர்பு கொண்டார்களா, அவர்களுக்கு பரிசோதனை செய்து நோய் இருந்தால் சிகிச்சை அளிக்கிறோம். இந்த நடைமுறைதான் கடைபிடிக்கப்படுகிறது. எனவே தமிழகத்தில் சமூக பரவல் இல்லை.
வீடு வீடாக பரிசோதனை
தமிழகத்தில் காய்ச்சல் கிளினிக்குகள் துவங்கப்பட்டுள்ளன. இதன் மூலமாக 10 ஆயிரம் பேர் கண்டறியப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர். சென்னை உள்ளிட்ட பல்வேறு மாநகராட்சிகளில் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து உங்களுக்கு காய்ச்சல் இருக்கிறதா, சளி, இருமல், தொண்டை வலி இருக்கிறதா, நோய் அறிகுறி இருக்கிறதா என்று கண்டறிந்து, அப்படி ஏதாவது இருந்தால், உடனடியாக அருகில் உள்ள பரிசோதனை மையங்களுக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்து நோய் தொற்று ஏற்பட்டிருந்தால், மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்தியாவிலேயே எங்கும் இல்லாத அளவிற்கு, தமிழக அரசின் சுகாதாரத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி இணைந்து மிகச்சிறப்பாக செயல்பட்டு நோய் பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. நோய் பரவல் தடுக்கப்பட்டு கொண்டு இருக்கிறது என்றார் எடப்பாடியார்.
மக்கள் வாழ்வாதாரம் முக்கியம்
ஊரடங்கு உத்தரவு காரணமாக கொரோனா பரவல் குறைந்துள்ளது. பிறகு ஏன் அதை தொடரவில்லை என்ற கேள்விக்கு, வாழ்வாதாரம் என்பது மிக சவாலான விஷயம். ஒரு பக்கம் நோய் பரவலை குறைக்க வேண்டும். மற்றொரு பக்கம் வாழ்வாதாரத்தை மக்களுக்கு கொடுக்க வேண்டும். அது அரசின் கடமை. எனவே முழுக்க முழுக்க ஊரடங்கே பிறப்பித்துக் கொண்டிருந்தால் என்னாவது. ஆக மொத்தம் சுமார் 105 நாட்கள் நாம் ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து வருகிறோம். இத்தனை நாட்களும் முழு ஊரடங்கு அமல்படுத்தினால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
நன்றி மக்களே
ஊரடங்கு மூலமாக, பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு இருந்தாலும் சென்னை மாநகர மக்கள் மற்றும் மதுரை மாநகர மக்கள் மட்டுமல்லாது மொத்த தமிழக மக்களுக்கும், ஊரடங்கு உத்தரவுக்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கு இல்லை
சென்னையில் முழு ஊரடங்கு மீண்டும் வரும் வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, அப்படி வருவதற்கு வாய்ப்பு இல்லை என்று கருதுகிறேன். முழுக்க முழுக்க அது மக்கள் கையில்தான் இருக்கிறது. அரசு அறிவித்த வழிமுறைகளை கடைபிடித்தால், நோய் பரவல் குறையும். தெருத்தெருவாக ஒலிபெருக்கி மூலமாக அரசு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. துண்டுப் பிரசுரம் கொடுத்து பிரச்சாரம் செய்கிறோம். இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.