மதுரையை தொடர்ந்து மேலும் 3 மாவட்டங்களில் முழு ஊரடங்கு? தமிழக அரசு பரிசீலனை
சென்னை: 24ம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை மதுரையில் முழு ஊரடங்கு அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மதுரையைத் தொடர்ந்து வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை உள்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்த தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மதுரை, வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேடையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மதுரையில் புதிதாக 68 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால் அங்கு கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 705 ஆக உயர்ந்துள்ளது. மதுரையில் ஒரு சில நாளில் மட்டும் 300க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகிழ்ச்சி தகவல்: கொரோனாவை குணப்படுத்தும் 'கோவிஃபார்' மருந்து இந்தியாவில் அறிமுகம்! ஒரு டோஸ் ரூ.6000
தினமும் அதிகரிப்பு
மதுரையைப் போல் வேலூரில் கொரோனா தொற்று பாதிப்பு மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. 100களில் இருந்த கொரோனா பாதிப்பு இன்று 477 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் 87 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு கொரோனா பரவல் கொத்துக்கொத்தாக பரவி வருகிறது.
அதிகம் பேருக்கு
சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்த போதே திருவண்ணாமலையில் கொரோனா தொற்று அதிவேகமாக உயர்ந்து வந்தது. அங்கு தற்போது கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1060 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் புதிதாக 76 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தினமும் ஏராளமானோர் திருவண்ணாமலையில் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
கொத்தாக பாதிப்பு
வேலூரின் அருகே உள்ள ராணிப்பேட்டையில் கொரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்து வருகிறது. 470 பேருக்கு தொற்று பாதித்துள்ளது. கொத்துக்கொத்தாக பரவல் ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த பகுதிகளில் கடும் கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் விதித்து வருகிறது.
தமிழக அரசு பரிசீலனை
இந்நிலையில் மதுரை, வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை உள்பட 4 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவதால் முழு ஊரடங்கை அமல்படுத்த தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் முதல்கட்டமாக மதுரையில் 24ம் தேதி அதிகாலை தொடங்கி வரும் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்துவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மதுரையில் 29 மற்றும் 30ம் தேதிகளில் வங்கிகள் இயங்காது. டீக்கடைகள் இயங்காது. ஆட்டோக்கள் இயங்காது என அரசு அறிவித்துள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டையில் ஊரடங்கு அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. வெறும் நான்குடன் முடியுமா அல்லது கூடுமா என்பது நிலைமையை பொறுத்து அரசு அறிவிக்கும் என கூறப்படுகிறது.