சென்னை உட்பட 4 மாவட்டங்களில் ஜூன் 19 முதல் 12 நாட்கள் முழு ஊரடங்கு.. அரசு அதிரடி அறிவிப்பு
சென்னை: ஜூன் 19ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி இரவு 12 மணி வரை பெருநகர் சென்னை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், திருவள்ளூர், செங்கல்பட்டு , காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருகிறது.
அதே நேரம், கடந்த காலத்தில் முழு ஊரடங்கு உத்தரவு காலத்தின்போது எப்படியான தளர்வுகள், அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் வழங்கப்பட்டதோ, அதேபோன்ற பணிகளுக்கு இப்போதும், தளர்வுகள் வழங்கப்படும்.
மருந்தகங்கள், மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ் ஆகியவை இயங்க அனுமதிக்கப்படும். வாடகை ஆட்டோ, டாக்ஸி, தனியார் வாகன உபயோகங்கள் அனுமதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரக்கு போக்குவரத்து
சரக்கு போக்குவரத்து, அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல எந்த தடையும் இல்லை. மளிகை, காய்கறி, பெட்ரோல் நிலையங்கள் காலை 6 முதல் மதியம் 2 மணிவரை மட்டுமே இயங்கும். ரேஷன் கடைகளும் காலை 8 மணி முதல் மதியம் 2 மணிவரை செயல்படும். வீட்டிலிருந்து 2 கி.மீ சுற்றளவு உள்ள பகுதிகளில் மட்டுமே மக்கள் கடைகளுக்குச் சென்று பொருட்கள் வாங்க வேண்டும்.
தேனீர் கடைகள் திறக்காது
உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை திறந்திருக்கும். பார்சல் மட்டுமே அனுமதிக்கப்படும். தேநீர் கடைகள் திறக்க அனுமதியில்லை. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ரேஷன் கடைகள் இயங்காது. நிவாரண பொருட்கள் வீடு தேடி வரும்.
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு
அதேநேரம், 21 ஆம் தேதி, 28 ஆம் தேதி, இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு. எந்த தளர்வும் இல்லை. இந்த நாட்களில் மருத்துவ அவசர நிலைக்கு தேவையான மருத்துவமனைகள், மெடிக்கல்கள், ஆம்புலன்ஸ்கள் மட்டும் இயங்கும். பிற கடைகள் எதுவும் திறக்காது.
உதவித் தொகை
சென்னை காவல் எல்லைக்குட்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் மூலமாக ரூ.1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் தலா ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படும். திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கும்மிடிபூண்டி உட்பட்ட நகர பகுதிகளிலும், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, காட்டாங்குளத்தூர் உட்பட்ட நகர பகுதிகளிலும், காஞ்சிபுரம் பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.
வங்கிப் பணிகள்
அதேநேரம், ஏடிஎம்கள் வழக்கம்போல செயல்படும். அது சார்ந்த வங்கி பணிகள் மற்றும் அம்மா உணவகங்கள் வழக்கம்போல செயல்படும். முதியோர், மாற்றுத் திறனாளி, ஆதரவற்றோர் இல்லங்களில் உதவி செய்வதற்கு தன்னார்வலர்களுக்கு அனுமதி வழங்கப்படும். அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும்.
அலுவலக ஊழியர்கள்
மாநில அரசு துறைகள், மத்திய அரசு துறைகளில் 33% ஊழியர்களுடன் அலுவலகங்கள் இயங்கும். தினமும் தொழிலாளர்கள் வேலைக்கு சென்று வர சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அனுமதி இல்லை. அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தி நிறுவனங்கள், மீடியா பணியாளர்கள் போன்றோர் தினமும் பணிக்குச் செல்ல அனுமதி உண்டு. சென்னையில் இருந்து வெளியே பணிக்கு செல்வோர், ஒருமுறை பரிசோதனை நடத்திவிட்டு, பணியிடத்திலேயே தங்கி கொள்ள வேண்டும். இதே போலவே வெளியே இருந்து பணிக்கு வருபவரும் சென்னைக்கு உள்ளேயே, 12 நாட்களும் தங்கியிருக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல்.. சென்னையில் மதியம் 2 மணிவரைதான் கடை திறந்திருக்கும்.. வெள்ளையன் அதிரடி அறிவிப்பு