Bus Strike:வங்கி விடுமுறை காரணமாக ஊழியர்களுக்கு சம்பளம் லேட் ஆயிருச்சு.. அமைச்சர் விளக்கம்
சென்னை: வங்கி விடுமுறை காரணமாகவே சென்னை மாநகர போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக, மாநில போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கமளித்துள்ளார்.
தலைநகர் சென்னையில் காலை முதல் பெரும்பாலான பேருந்துகள் ஓடவில்லை. ஜூன் மாதத்திற்கான ஊதியம் முழுமையாக வழங்கப்படாததால் திடீர் போராட்டத்தில் குதித்துள்ளனர் சென்னை மாநகர போக்குவரத்து ஊழியர்கள்.
தவணைமுறை ஊதியம் வழங்கப்பட்டுள்ளதாலும், தாங்க முடியாத பணிச்சுமை உள்ளிட்ட காரணங்களால் போக்குவரத்து தொழிலாளர்கள் அறிவிக்கப்படாத திடீர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இவர்களின் போராட்டம் காரணமாக மிக குறைவான எண்ணிக்கையில் தான் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தலைநகர் சென்னையில் உள்ள கிண்டி, தாம்பரம், பிராட்வே, அம்பத்தூர், அடையாறு, தி.நகர், வடபழனி, பெரம்பூர், குன்றத்தூர் உள்ளிட்ட பணிமனைகளில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை மாநகர பேருந்து ஓட்டுநர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் ஓடவில்லை இன்று வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை என்பதால், போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களும், அலுவலகங்களுக்கு செல்வோரும் போக்குவரத்து தொழிலாளர்களின் திடீர் போராட்டத்தால் கடும் அவதியடைந்துள்ளனர்.
இதனிடையே சென்னை மாநகர போக்குவரத்து ஊழியர்களின் குற்றச்சாட்டுகளுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கமளித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், நேற்று வங்கி விடுமுறை என்பதால் தான் மாநகர போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இன்று வேலைநாள் என்பதால் மாலைக்குள் போக்குவரத்து ஊழியர்களின் முழு ஊதியமும் அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உறுதி கூறியுள்ளார்.
இதனிடையே ஓட்டுநர்களுக்கு வழங்க வேண்டிய 40% ஊதியம் இன்று மாலைக்குள் வழங்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகமும் உறுதி அளித்துள்ளது. மேலும் ஊழியர்களுக்கு குறைவாக ஊதியம் தரப்படுமென்ற வதந்தியை யாரும் நம்ப வேண்டாம், என்றும் போக்குவரத்து கழகம் கூறியுள்ளது.