தீவிரவாத அமைப்பிற்கு நிதி திரட்டல்.. என்ஐஏ-வால் கைது செய்யப்பட்ட இருவருக்கு நீதிமன்ற காவல்
சென்னை: என்ஐஏ அதிகாரிகளால் நாகையில் கைது செய்யப்பட்ட இருவரை, 25-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க, பூந்தமல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி செந்தூரபாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
அன்சருல்லா என்ற பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டிய புகாரில், என்ஐஏ அதிகாரிகளால் இன்று காலை அசன் அலி, ஆரிஷ் முகமது ஆகியோர் கைது செய்யப்பட்டனர். முன்னதாக என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமையை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், நேற்று காலை முதல் மாலை வரை சுமார் 9 மணி நேரத்திற்கும் மேல் நாகை அருகே உள்ள மஞ்சக்கொல்லை, சிக்கல் உள்ளிட்ட இடங்களில் அதிரடி ரெய்டில் ஈடுபட்டனர்.
சிக்கல் மெயின் ரோட்டில் உள்ள அசன் அலி வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டில் ,முக்கிய ஆவணங்கள் அடங்கிய லேப்டாப், பென்டிரைவ் மற்றும் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பான, செய்திதாள் செய்திகளும் அவரது வீட்டில் அதிகளவு இருந்ததாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
அதே நேரத்தில் அசன் அலி உறவினரான மஞ்சக்கொல்லை புதின் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த ஆரிஷ் முகமது இல்லத்திலும் ரெய்டு நடத்திய என்ஐஏ அதிகாரிகள் அங்கிருந்தும், செல்போன், லேப்டாப் உள்பட முக்கிய ஆவணங்கள் அடங்கிய பொருட்களை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து ஆரிஷ் முகமது, அசன் அலி இருவரையும் பிடித்து வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு இருவரிடமும் நள்ளிரவு வரை, அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் இருவரையும் கைது செய்த என்ஐஏ அதிகாரிகள், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அவர்களை சென்னைக்கு கொண்டு வந்தனர்.
பின்னர் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்ற மாஜிஸ்திரேட் செந்தூரபாண்டியன் இல்லத்தில் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் இருவர் மீதான வழக்கை விசாரித்த நீதிபதி 25-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.