ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரிகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு.. தீவிர நடவடிக்கையில் தமிழக அரசு
சென்னை: தமிழகத்தை தண்ணீர் பஞ்சமும், வறட்சியும் உலுக்கி வரும் நிலையில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரிகள் மற்றும் நீர்நிலைகளை சீரமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் 39,200 ஏரிகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில், சுமார் 14 ஆயிரம் ஏரிகள் உள்ளன. மற்ற சில ஆயிரம் ஏரிகள் உள்ளாட்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால், தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சியும், தண்ணீர் பற்றாக்குறையும் நிலவி வருகிறது. குடிப்பதற்கு கூட தண்ணீர் இன்றி மக்கள் தவித்து வருகின்றனர். மற்ற பகுதிகளை விட மோசமான வறட்சியில் சிக்கி தவிக்கிறது தலைநகரான சென்னை.
ஏரிகளின் நகரம் என்றழைக்கப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் வற்றிவிட்டன. இதனால் அம்மாவட்டத்தை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் 500 அடிக்கும் கீழ் சென்று விட்டது.
ஆழ்துளை கிணறுகளும் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகின்றன. லாரிகள் மூலம் தண்ணீர் கிடைத்தாலும், ரூ.2 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விலை வைத்து விற்பனை செய்யப்படுவதால் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
தமிழகத்திலுள்ள ஏரிகள் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாத நிலையில், அவற்றின் கரைகள் மிகவும் பலவீனமாக காணப்படுகிறது. எனவே ஏரிகளின் கொள்ளளவை மீட்கும் முயற்சியாக, கடந்த ஆண்டு ரூ.330 கோடி மதிப்பீட்டில் 1,511 ஏரிகளை புனரமைக்கும் பணி துவங்கியது. இதில் சுமார் 1300-க்கும் மேற்பட்ட ஏரிகளை புனரமக்கும் பணி முடிந்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
எஞ்சியுள்ள 200 ஏரிகளை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் அடுத்த கட்ட பணிகளை துவக்கும் வகையில், பலவீனமான ஏரிகள் மற்றும் நீர்நிலைகளை கண்டறிய பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
இதன்படிஆய்வு செய்து திட்ட அறிக்கையை பொதுப்பணித்துறை தலைமையிடம், பொறியாளர்கள் தாக்கல் செய்துள்ளனர். இதனையடுத்து மாநிலம் முழுவதும் அடுத்த கட்டமாக 1,840 ஏரிகள் மற்றும் நீர்நிலைகளை ரூ.500 கோடி செலவில் சீரமைக்க திட்டம் தீட்டப்பட்டு, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
நீர்நிலைகளின் கரைகளை பலப்படுத்தி தூர்வார நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. இதில் சென்னை மண்டலத்திற்கு ரூ.93 கோடியும், திருச்சி மண்டலத்திற்கு ரூ.109 கோடியும், மதுரை மண்டலத்திற்கு ரூ.230 கோடியும், கோவைக்கு ரூ.66 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசு ஒதுக்கியுள்ள நிதி மூலம் ஏரிகள் மற்றும் நீர்நிலைகளின் கரைகளை பலப்படுத்துதல், மதகுகள், தடுப்பணைகளை பழுது பார்ப்பது மற்றும் மறுக்கட்டமைப்பு செய்வது, பழுதாகியுள்ள ஷட்டர்களை பழுது பார்ப்பது, புதிய ஷட்டர்களை அமைப்பது, கால்வாய்களை தூர்வாருவது உள்ளிட்ட பணிகளை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.