தமிழகத்தில் 1 வாரத்துக்கு ஊரடங்கு நீட்டிப்பு?.. டாஸ்மாக் திறக்க வாய்ப்பு.. வெளியாகிறது அறிவிப்பு
ஊரடங்கில் தளர்வு குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்
சென்னை: தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவில் மேலும் தளர்வுகள் வருமா? என்பது குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ள நிலையில், மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிக்க உயர் அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். எனவே, இதுகுறித்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றபோது, தமிழ்நாடு மிக மோசமான நிலைமையில் இருந்தது.. தொற்று பாதிப்பு எகிறி கொண்டே இருந்தது.. உயிரிழப்புகளும் அதிகமாயின..
ஆம்புலன்ஸ்களிலேயே நிறைய தொற்று நோயாளிகள் உயிரிழக்கும் சூழலும்கூட ஏற்பட்டது.. ஆனால், பதவியேற்றதில் இருந்தே தொற்று விஷயத்தில் மட்டுமே முழு கவனத்தை செலுத்தி வருகிறார் ஸ்டாலின்.
தளர்வுகளுடன் ஊரடங்கு.. வெளியூர் போக போறீங்களா.. தமிழ்நாடு அரசின் இ-பதிவு தளத்தில் புதிய வசதி!
தொற்று
முதல்வேலையாக, லாக்டவுனை அறிவித்தார்.. பிறகு, அமைச்சர்கள், அதிகாரிகள் என மொத்த திமுக அரசையும் களப்பணியில் குதிக்க செய்து, " ஒருங்கிணைந்து தொற்றை விரட்டுவோம்"6 என்று அறிவுறுத்தினார்... இதைதவிர பல மாவட்டங்களில் நேரடியாக ஆய்வுக்கு சென்றார்.
ஊரடங்கு
ஊரடங்கை மேலும் கடுமையாக்கி, கடந்த மே 24-ந் தேதியில் இருந்து தளர்வுகள் எதுவும் இல்லாத முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.. இந்த முழு ஊரடங்கு உத்தரவு 2 வாரங்கள் நீட்டிக்கப்பட்டது.. அதன்படி, 36 ஆயிரம் என்ற தினசரி தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறைந்து 19 ஆயிரம் என்ற எண்ணிக்கைக்கு வந்து நின்றுள்ளது.. இதை தொடர்ந்து கடந்த 7-ந் தேதியில் இருந்து சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
எண்ணிக்கை
இப்போது கொரோனா பரவல் மெல்ல மெல்ல குறைந்தாலும், உயிரிழப்புகள் தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.. நேற்றுகூட தொற்று எண்ணிக்கை 17 ஆயிரத்து 321 ஆக குறைந்திருந்தது. இந்த நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாகவும், கூடுதல் தளர்வுகள் வழங்கப்படுவது தொடர்பாகவும் தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.
அதிகாரிகள்
இக் கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகர கமிஷனர் சங்கர் ஜிவால், சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்
அறிவிப்பு
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, மாவட்ட கலெக்டர்களுடனும், மருத்துவ நிபுணர் குழுவுடனும், முதல்வர் கலந்தாலோசனை மேற்கொள்வார் என்றும், அதில் கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில், ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாகவும், கூடுதல் தளர்வுகள் தொடர்பாகவும் அதிகாரபூர்வ அறிவிப்பை அவர் வெளியிடுவார் என்றும் கூறப்பட்டது. அதேபோல, 11 மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு நீடிப்பதால், அங்கும் தளர்வுகள் அறிவிக்கப்படுமா? என்பது குறித்தும் இன்று ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்பட்டது.
ஒருவாரம்
இந்நிலையில், மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிக்க உயர் அதிகாரிகள் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர்... எனவே, தற்போதுள்ள நிலைலயில், ஒரு வாரத்துக்கு லாக்டவுனை நீட்டித்து அறிவிப்பு வெளியாகும் வாய்ப்பு உள்ளது. அதேசமயம், 27 மாவட்டங்களுக்கு ஊரடங்கு தளர்வுகள் வரலாம் என்றும் சொல்லப்படுகிறது. மேலும், தொற்று அதிகமுள்ள மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.