3 நாட்களுக்கு.. சென்னையில் ட்ரோன்களை பறக்க விடக்கூடாது.. காவல்துறை வார்னிங்.. எதற்காக தெரியுமா?
சென்னை: ஜி20 கல்வி பணிக்குழுவின் முதல் கூட்டம் நாளை முதல் வருகிற பிப்ரவரி 2-ந்தேதி வரை 3 நாட்கள் சென்னையில் நடைபெற உள்ளது. இதையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னை மற்றும் மாமல்லபுரத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதித்து சென்னை காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வளர்ச்சி அடைந்த மற்றும் வளரும் நாடுகளின் பொருளாதாரங்களை ஒன்றிணைக்க ஜி 20 கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த கூட்டமைப்பில் அர்ஜெண்டினா, பிரேசில், சீனா, அமெரிக்கா , இந்தியா உள்பட 20 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
இந்த நிலையில், 2023-ம் ஆண்டுக்கான ஜி-20 அமைப்புக்கு இந்தியா தலைமை பொறுப்பை ஏற்றுள்ளது. ஜி 20 உச்சி மாநாடும் இந்தியாவில் தான் நடைபெற இருக்கிறது.
புதுவையில் ஜி20 அறிவியல் மாநாடு கூட்டம் தொடங்கியது.. 5 இடங்களில் 144 தடை உத்தரவு
இந்தியாவில் ஜி 20 மாநாடு
ஜி 20 மாநாட்டையொட்டி, நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களின் தலைநகரம் மற்றும் முக்கிய சுற்றுலா நகரங்களில் ஆய்வு கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதன்படி, ஜி20 கல்வி பணிக்குழுவின் முதல் கூட்டம் நாளை முதல் வருகிற பிப்ரவரி 2-ந்தேதி வரை 3 நாட்கள் சென்னையில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் ஆஸ்திரேலியா, கனடா, பிரேசில் உள்ளிட்ட 20 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.
சென்னையில் சிறப்பு ஏற்பாடுகள்
நாளை (31 ஆம் தேதி) சென்னை ஐஐடியிலும், பிப்ரவரி 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் சென்னை தாஜ் கோரமண்டல் நட்சத்திர விடுதியிலும் இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் பங்கேற்பதற்காக வெளிநாட்டு பிரதிநிதிகள், தமிழ்நாட்டிற்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். வெளிநாட்டு பிரதிநிதிகள் வருகை காரணமாக சென்னை விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவர்களை வரவேற்கும் விதமாக சென்னை விமான நிலையத்தில் வண்ணக்கோலங்கள், வரவேற்பு பதாகைகள் என சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
வரவேற்பு பதாகைகள்
விமான நிலையத்தின் உள்புறத்தில் இருந்து வெளிப்பகுதி வரை இந்த பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் வரவேற்பு பதாகையில் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. ஜி 20 மாநாட்டின் தாரக மந்திரமான "ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்" என்று எழுதப்பட்டுள்ளது. வரவேற்பு பதாகைகளில் பிரதமர் மோடியின் படம் மட்டுமே இடம் பெற்றுள்ளது. முதல்வர் மு.க ஸ்டாலின் புகைப்படமும் பெயரும் இல்லை. வரவேற்பு பதாகைகள் அனைத்தும் ஜி 20 மாநாட்டு குழுவால் தயாரித்து அனுப்பப்பட்டு இருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
டிரோன்கள் பறக்க தடை
இதனிடையே, ஜி 20 மாநாட்டை ஒட்டி சென்னை மற்றும் மாமல்லபுரத்தில் 3 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. நாளை முதல் வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி வரை பாதுகாப்பு காரணங்களுக்காக டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாகவும் சென்னை காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜி 20 மாநாட்டில் பங்கேற்கும் பிரதிநிதிகள் தங்குமிடம் பயணம் செய்யும் வழித்தடம் ஆகியவை சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.