கஜா புயல் நிவாரணம்.. 8 கோடி கொடுத்து உதவிய லாட்டரி அதிபர் மார்டின்!
கஜா புயல் நிவாரணத் தொகையாக 5 கோடி பணம் மற்றும் 3 கோடிக்கு பொருள் கொடுத்து அசத்தியுள்ளார் கோவையை சேர்ந்த லாட்டரி தொழிலதிபரான மார்டின்.
சென்னை: கஜா புயல் நிவாரணத் தொகையாக 5 கோடி பணம் மற்றும் 3 கோடிக்கு பொருள் கொடுத்து அசத்தியுள்ளார் கோவையை சேர்ந்த லாட்டரி தொழிலதிபரான மார்டின். அவரது மனைவி, லீமா ரோஸ், மகன் சார்லஸ் மார்டின், மருமகள் சிந்து சார்ல்ஸ் ஆகியோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து காசோலை வழங்கினர்.
சாண்டியாகோ மார்டின் (58) ராமநாதபுரத்தில் பிறந்த இவர்தான் இவ்வளவு பெரிய உயரத்தை தொட்டு இருப்பது. வறுமையின் காரணமாக தனது 12வது வயதில் பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்டு தனது தந்தையின் டீக்கடையில் வேலை பார்க்க துவங்கினார். பல வருடங்களுக்கு பின், கோவை பஸ் ஸ்டாண்ட் அருகே தனியாக ஒரு சிறிய கடையை துவங்கி அதில் லாட்டரி சீட்டுகளும் விற்க துவங்கினார்.
இப்படித் தான் துவங்கியது மார்டினின் லாட்டரி சாம்ராஜ்யம். தற்போது இவர் இந்திய லாட்டரி தொழிலில் முதன்மையானவர். இந்தியா முழுக்க பல்வேறு ஜாம்பவான்கள் இத்தொழிலின் மீது குறி வைத்தாலும், இதில் நிலைத்து நிற்பவர் மார்டின் மட்டுமே.
2004-ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே அதிக தனிமனித வருமான வரியான 50 கோடி ரூபாயை கட்டி அனைவரின் பார்வையையும் ஈர்த்தவர். ஜெயலலிதா லாட்டரி விற்பனைக்கு தடை விதித்த போது, இவர் தனது லாட்டரி தொழிலை வட மாநிலங்களை நோக்கி நகர்த்தினார்.
அங்கேயும் மார்டின் தனது தொழிலை நிலைநாட்டினார். தற்போது மார்டின் ஓமியோபதி மருத்துவமனை, அரைஸ் ஸ்டீல் மில், மார்டின் ஸ்பின்னிங் மில் என பல்வேறு நிறுவனங்களை நிறுவி, பல்லாயிரக்கணக்கான மக்கள் வேலை செய்யும் மார்டின் குரூப் ஆப் கம்பனிஸ் உடைய நிறுவனத் தலைவராக உருவெடுத்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியுடன் நெருக்கம் காட்டியதற்காக கைது, வழக்குகள் என்று பல மீடியாக்களின் பேசும் பொருளானார். பல கைது படலங்கள், விசாரணைகளையும் தாண்டி மார்டினின் பல்வேறு தொழில்கள் கொடி கட்டி பரப்பதாகவே பிசினஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
லாட்டரி என்கிற சர்ச்சைக்குரிய முத்திரை இவர் மீது இருந்தாலும், மக்கள் பேரிடர்களை சந்திக்கும் போது அவர்களுக்கு உதவுவதை வழக்கமாக வைத்துள்ளார். 2015 சென்னை வெள்ளத்தின் போது 2 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை மக்களுக்கு நேரடியாகவே கொடுத்துள்ளார்.
அதே போல சமீபத்தில் ஏற்பட்ட கேரளா வெள்ளத்தின் போது 50 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை நேரடியாக கொடுத்தது மட்டுமல்லாமல் 25 லட்சம் ருபாய் முதலமைச்சர் நிதிக்கு வழங்கினார்.
தற்போது, டெல்டா மாவட்டங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கஜா புயலின் நிவாரணத்துக்காக 5 கோடி எனும் பெரும் தொகையை முதலமைச்சர் நிதி நிவாரணத்திற்கு கொடுத்தது மட்டுமல்லாமல் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு 3 கோடி ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை வழங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். தனி மனிதனாக கஜா புயல் நிவாரணப் பங்களிப்பில் மார்டின் தான் முதலிடம் என்கிறார்கள்.
RECOMMENDED STORIES