புயல் பாதித்த இடங்களை நாளை மறுநாள் பார்வையிடுவார் முதல்வர்!
கஜா புயலில் பாதித்த இடங்களை முதல்வர் பழனிச்சாமி வரும் செவ்வாய் கிழமை அன்று பார்வையிடுவதாக கூறியுள்ளார்.
சென்னை: கஜா புயலில் பாதித்த இடங்களை முதல்வர் பழனிச்சாமி வரும் செவ்வாய் கிழமை அன்று பார்வையிடுவதாக கூறியுள்ளார்.
கஜா புயலால் நாகையில் பாதிக்கப்பட்டு இருக்கும் பகுதிகளை இன்று பார்வையிட திட்டமிட்டு இருந்த முதல்வர் பழனிச்சாமியின் பயண திட்டம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கஜா புயல் மிகப்பெரும் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. இயல்பு வாழ்க்கை மொத்தமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த புயலால் 7 மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பணி
இந்த நிலையில் புயல் பாதிப்பு குறித்து தமிழக முதல்வர் பழனிச்சாமி சேலத்தில் பேட்டி அளித்தார். அதில், புயல் பாதிப்புகளை பார்வையிட இன்னும் நேரம் தேவை. நிவாரண பணிகளை பார்வையிட மாவட்ட வாரியாக புதிய அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். அதிகாரிகளும், அமைச்சர்களும் இணைந்து பணிகளை மேற்கொள்வார்கள்.
என்ன விவரம்
எல்லா பகுதியிலும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. 320 மருத்துவ முகாமும், 1011 நடமாடும் மருத்துவ முகாமும் அமைக்கப்பட்டுள்ளது.11,000 மின் ஊழியர்கள் களத்தில் உள்ளனர். முகாமில் 2.50 லட்சம் மக்கள் உள்ளனர். எல்லோருக்கும் உணவுகள் தயார் செய்யப்பட்டுள்ளது
மத்திய அரசு
புயல் பாதிப்புகளை கணிக்க முடியவில்லை, தொடர்ந்து பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. மத்திய அரசுக்கு முதற்கட்ட விவரங்களை அளித்துள்ளோம். முழுமையான அறிக்கை விரைவில் அளிக்கப்படும். மத்திய அரசு தமிழகத்தை கண்காணித்து வருகிறது. விரைவில் தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் தமிழகம் வர உள்ளது.
எப்போது செல்வார்
புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நாளை மறுநாள் செல்வேன். அரசு நிகழ்ச்சிகள் காரணமாக இன்று புயல் பாதித்த இடங்களுக்கு செல்ல முடியவில்லை. ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்ட அரசு நிகழ்ச்சிகள் உள்ளதால் நாகைக்கு இன்று செல்ல முடியவில்லை, என்றுள்ளார்.