கஜா புயல் நிவாரணமாக தமிழக அரசு ரூ.1000 கோடி ஒதுக்கீடு.. நாளை ஹெலிகாப்டரில் முதல்வர் ஆய்வு!
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை ஆய்வு செய்கிறார்.
சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை ஆய்வு செய்கிறார். மேலும் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப்பணி மேற்கொள்ள தமிழக அரசு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
கஜா புயல் மிகப்பெரும் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை மொத்தமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த புயலால் 7 மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்டு இருக்கும் பகுதிகளை முதல்வர் பழனிச்சாமி நாளை ஆய்வு செய்கிறார்கள்.
ஹெலிகாப்டர் மூலம்
ஹெலிகாப்டரில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்கிறார் முதல்வர்.நாகை , தஞ்சை, திருச்சி, பட்டுக்கோட்டை, கடலூர், வேதாரண்யம் பகுதிகளை முதல்வர் ஆய்வு செய்ய உள்ளார். புயலால் பாதிக்கப்பட்ட மற்ற பகுதிகளையும் பார்வையிடுவார்.
நிவாரணம் ஒதுக்கீடு
மேலும் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப்பணி மேற்கொள்ள தமிழக அரசு முதற்கட்டமாக ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. ஏற்கனவே கஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்பட உள்ளது. இது மட்டுமில்லாமல் இன்னும் சில இழப்புகளுக்கும் நிவாரணம் அறிவித்துள்ளார்.
வீடுகளுக்கு எவ்வளவு
பகுதியாக சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு ரூ.4100 அளிக்கப்படும். முழுவதும் சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு ரூ.10,000 அளிக்கப்படும். புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.600 அளிக்கப்படும். மரத்தை வெட்ட ஒரு மரத்திற்கு ரூ.500 அளிக்கப்படும்.
பயிர்கள் எவ்வளவு
சொட்டுநீர் பாசனத்தில் மறுசாகுபடி செய்ய ரூ.75,000 அளிக்கப்படும்.சேதமடைந்த மரத்திற்கு ரூ.500 அளிக்கப்படும். பயிர்களை மறுசாகுபடி செய்ய 40-50% மானியம் அளிக்கப்படும்.முந்திரி பயிர்சேதங்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.18,000 அளிக்கப்படும். சொட்டு நீர் பாசனத்திற்கு 100% மானியம் அளிக்கப்படும், மற்ற விவசாயிகளுக்கு 75% மானியம் அளிக்கப்படும், 175 மரங்கள் நடப்பட்டுள்ள ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.1,92,500 நிவாரணம் அளிக்கப்படும்.
ஒதுக்கீடு
சுகாதாரத்துறைக்கு ரூ.2கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்துக்கு ரூ.5கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஊராட்சித்துறைக்கு ரூ.25கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை துறைக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறைக்கு ரூ.10கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகராட்சிக்கு ரூ.5கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பேரூராட்சிகளின் இயக்குநரகத்திற்கு ரூ.5கோடியும் ஒதுக்கீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, என்று கூறியுள்ளார்.