சமூக பிரச்சினைகளை பார்த்தால்.. கண்டும்.. காணாமலும் போக முடியலைங்க... !
சென்னை: சமூகத்தில் பிரச்சினைகள் குவிந்து கிடக்கும்போது யாருக்கோ நடக்குதுன்னு சும்மா கடந்து போக முடியாது என்று சமூக பொறுப்புடன் பேசுகிறார் காந்தி கணேஷ்.
அவரைப் பற்றி அவரே கூறியது இது...
என் பெயர் காந்தி கணேஷ்.. அக்டோபர் 2 1988 இல் பிறந்த உடனே இந்த பெயர் வச்சிட்டாங்க. சாதனைன்னு எந்த துறையில கேட்குறீங்கன்னு தெரியல... நான் வேலை பார்ப்பது தகவல் தொழில்நுட்ப துறை.. அதுல எல்லாரை மாதிரியும் ஒரு தொழிலாளிதான்.. தனிப்பட்டு சாதிக்கவில்லை.. ஆனால் சமூக பிரச்சினைகள் இங்க குவிந்து கிடக்கும் பொழுது யாருக்கோ நடக்குதுன்னு சும்மா கடந்து போக முடியாது.. அப்படி கடந்து போயிட்டா மனசு உறுத்தும்.
சமூக பிரச்சினைகளில் பங்கெடுப்பதால் அது சாதனை கிடையாது.. அதுபோல பல்லாயிரக்கணக்கனோர் இருக்காங்க.. அதனால ஏதாவது மாற்றம் வந்தால்தான் சாதனை.. அதுவரை இது ஒரு கடமைதான்.. கல்லூரி காலங்களில் அனைவரையும் திரட்டி போராட்டம் செய்து நீண்டநாள் முடங்கி கிடந்த கல்வி ஊக்கத்தொகையை துரிதபடுத்தி வாங்கி கொடுத்திருக்கோம், ஆனால் அந்த ஊக்கத்தொகை பட்டியலில் நான் இல்லை என்பது வேறு விடயம்..
அப்படி ஆரம்பிச்சதுதான் போராட்டம். அப்பறம் நம்ம கண்ணு முன்னாடி நடக்குற பிரச்சினைகளுக்கு நம்ம ஆற்றலுக்கு உட்பட்டு போராட்டம் செய்து சில நேரங்களில் சிறைக்கு வேண்டுமானால் போயிருக்கிறோம். அதுக்கு எங்களுக்கு கிடைத்த பட்டம் தேச துரோகிகள்.. அதை நாட்டுக்கு தீங்கானவர்கள் சொல்லி கேட்கும் பொழுது ஒரு ஆனந்தம் இருக்கும்..
மக்களுக்கானவர்கள் என எங்களை அங்கீகரிப்பதற்காக வார்த்தையாகத்தான் "தேச துரோகி" என்ற பட்டத்தை பார்க்கிறோம். இந்த பட்டத்தை வாங்குவது அவ்வளவு சாதாரண காரியம் அல்ல.. அதைத்தான் சாதனையாக நினைக்கிறேன்..
சமூகத்தின் பிரச்சினைக்காக குரல் கொடுக்கும் ஒவ்வொருவருமே காந்திதான்.