கருணாநிதி கொடுத்த பதவியை ராஜினாமா செய்தது ஏன்...? காரணம் கூறும் தமிழருவி மணியன்
சென்னை: 2020-ல் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது உறுதி என்றும், மாநிலம் முழுவதும் மக்கள் சந்திப்பு பயணத்தை மேற்கொள்வார் எனவும் தமிழருவி மணியன் கூறுகிறார்.
ரஜினிக்கு அனைத்து ஆலோசனைகளையும் வழங்கி வரும் தமிழருவி மணியன், ஒன் இந்தியா தமிழ் வாசகர்களுக்காக அளித்த பேட்டியின் விவரம் பின்வருமாறு;
கேள்வி: ரஜினிகாந்த் எதை அடிப்படையாக வைத்து அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார்?
பதில்: கருணாநிதி மறைவுக்கு பிறகு கட்சியில் ஏற்பட்ட வெற்றிடத்தை மு.க.ஸ்டாலின் நிரப்பிவிட்டார். அதில் மாற்றுக்கருத்தே இல்லை, அவரை அவரது கட்சிக்காரர்களும் ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை அவர் நிரப்பவில்லை. கருணாநிதியின் உயரத்துக்கு ஸ்டாலினால் வர முடியாது. இது அந்தப் பக்கம் என்றால் இந்தப்பக்கத்திற்கு வருகிறேன், ஜெயலலிதாவின் ஆளுமைக்கு எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் ஒரு போதும் நிகராக முடியாது.
ஜெயலலிதா மறைந்ததால் ஏற்பட்ட வெற்றிடத்தை ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். நிரப்பிவிட்டார்கள் என்று சொன்னால், மக்கள் வாய் விட்டு சிரித்துவிடுவார்கள். ஜெயலலிதாவின் ஆளுமைக்கு பக்கத்தில் கூட இவர்கள் நிற்க முடியாது. எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க வேண்டும் என நினைத்து மக்கள் வாக்களிக்கவில்லை. ஸ்டாலின் வெற்றிடத்தை நிரப்பிவிட்டார் என துரைமுருகன் கூறுகிறார், அப்படி என்றால் அவரது முகத்துக்காக இரண்டு தொகுதி இடைத்தேர்தலிலும் திமுகவுக்கு வாக்குகள் விழுந்திருக்க வேண்டுமே..
விக்ரவாண்டியில் எங்களால் தான் அதிமுக வெற்றிபெற்றது என ராமதாஸ் கூறுகிறார்.. அங்கு ஜாதிக்கு கிடைத்த வெற்றி. மக்கள் ஒன்றும் எடப்பாடிக்காக அதிமுகவுக்கு வாக்களிக்கவில்லை. ஆகையால், ஸ்டாலின், ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். ஆகிய யாரும் மக்களின் மகத்தான ஆதரவை பெற்ற ஆளுமைகளாக இல்லை.
கேள்வி: திமுக, அதிமுக, ஆகிய இரண்டு கட்சிகள் மீதும் உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம்?
பதில்: அந்த இரண்டு கட்சிகள் மீதும் நான் கொண்டுள்ள கோபம் சாகும் வரை தணியாது. காமராஜரை நெஞ்சார நேசித்து அவரை கடவுளாக வழிபட்டவன் நான். கடந்த ஐம்பது ஆண்டுகளாக திமுகவும், அதிமுகவும் மாறி மாறி ஆட்சி நடத்தி இவர்கள் செய்த அனைத்து ஊழல்களையும் கண்டு துடித்துப் போயிருக்கிறேன். எனக்கு திமுக மீதோ, அதிமுக மீதோ சொந்தப் பகை கிடையாது. நான் ஒரு பேச்சுக்கு சொல்கிறேன், முதல்வன் படத்தில் அர்ஜுன் ஒரு நாள் முதல்வர் ஆனது போல், எனக்கு ஒரு நாள் அதிகாரம் கிடைத்தால், கடந்த 50 ஆண்டுகளாக திமுக, அதிமுக பிரமுகர்கள் சேர்த்து வைத்த சொத்துக்களை பற்றி விசாரணைக்கு உட்படுத்துவேன்.
கேள்வி: திமுக ஆட்சியில் திட்டக்குழுவில் இருந்தீர்களே...
பதில்: இதை எல்லோரும் கேட்பார்கள்..அதற்கு விளக்கம் அளித்திருக்கிறேன். இப்போது அளிக்கிறேன், கருணாநிதி 5-வது முறையாக முதலமைச்சர் ஆனவுடன், ஒரு நாள் காலை 5 மணிக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, நீங்கள் பிளானிங் கமிஷனில் இடம்பெற வேண்டும் எனக் கேட்டார். நான் வேண்டாம் என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே, அதெல்லாம் தெரியாது மாலை 5 மணிக்கு வீட்டில் வந்து பாருங்கள் எனச் சொல்லிவிட்டு தொலைபேசியை வைத்துவிட்டார். ஒரு முதலமைச்சர் அழைத்திருக்கிறார் என்பதால், நானும் அன்று மாலையே கருணாநிதியை சந்திக்க அவரது வீட்டுக்கு சென்றேன். அங்கே அவர் என்ன முடிவெடுத்து இருக்கீங்க என என்னிடம் கேட்டார். நான் எனது நிலைப்பாட்டை விளக்கினேன். ஆனால் அவர் விடுவதாக இல்லை, உங்களை போன்றவர்கள் தான் அந்த குழுவில் இடம்பெற வேண்டும். அப்போது தான் மக்களுக்கு நல்ல திட்டங்களை வகுக்க முடியும் எனக் கேட்டுக்கொண்டாதால் வேறு வழியின்றி ஒப்புக்கொண்டு 30 மாத காலம் அந்தப் பதவியில் இருந்தேன்.
கேள்வி: பிறகு ஏன் அந்தப் பதவியிலிருந்து விலகினீர்கள்...என்ன முரண்பாடு ஏற்பட்டது?
பதில்: ஈழப்பிரச்சனை தான்.
கேள்வி: ரஜினிக்கு நீங்கள் ஆலோசனைக் கூறுவது தற்போதும் தொடர்கிறதா? சந்திப்புகள் நடக்கிறதா?
பதில்: பல மாதங்களாக அவரை சந்திக்கிறேன், அவருடன் மணிக்கணக்கில் பேசுகிறேன். எத்தனை முறை சந்தித்தேன், எத்தனை மணி நேரம் பேசினேன் என்பதற்கு கணக்கே கிடையாது. இரண்டு நண்பர்கள் சந்தித்தால் ஒருவரிடம் ஒருவர் எப்படி பேசிக்கொள்வார்களோ அப்படித்தான் பேசி வருகிறோம். இதில் போய் நான் ரஜினிக்கு ஆலோசகர் எனக் கூறுவதெல்லாம் மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. ரஜினி விபரம் தெரியாதவர் இல்லை. ஒரு வார்த்தையை வெளியிடுவதற்கு முன்பு நூறாயிரம் முறை சிந்திப்பவர் ரஜினி. 2020-ல் ரஜினி கட்சி தொடங்குவார், தமிழகம் முழுவதும் மக்களை சந்திக்க செல்வார்.
கேள்வி: ரஜினி நேரடியாக சட்டமன்றத் தேர்தலுக்கு களத்திற்கு வருவது ஏன்?
பதில்: அவர் அரசியல் தொடர்பான அறிவிப்பை வெளியிடும் போதே இதை தெளிவாக கூறிவிட்டார். பிறகென்ன சந்தேகம், அவர் சட்டமன்றத் தேர்தலில் களம் காண்போம் என்றுதானே சொல்லியிருந்தார். உள்ளாட்சித் தேர்தலோ, எம்.பி. தேர்தலையோ அவர் குறிப்பிடவில்லையே. ஆகையால் அதன் படி அவர் வருவார்.