"திடீர் பல்டி".. அப்படி பேசினாரே தமிழருவி மணியன்.. இப்போ ஏன்.. கசிந்த தகவல்.. வெளியான மறுப்பு
காந்திய மக்கள் இயக்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது
சென்னை: காந்திய மக்கள் இயக்கம், ரஜினி மக்கள் மன்றத்துடன் இணைப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் இது குறித்து காந்திய மக்கள் இயக்கம் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
ரஜினிகாந்த் எப்படியாவது கட்சியை ஆரம்பித்துவிட வேண்டும் என்று, ரஜினியை விட அதிகமாக ஆர்வமாக இருந்தது மூத்த தலைவர் தமிழருவி மணியன்தான்.
ரஜினியே சும்மா இருந்தாலும் அவரை கட்சி தொடங்கும்படி உசுப்பேத்தி கொண்டே இருந்ததுடன், அடுத்த முதல்வர் சாட்சாத் ரஜினிதான் என்று சொல்ல ஆரம்பித்தவர்... ஓயாமல் போயஸ் கார்டனுக்கு சென்று ஆலோசனை நடத்திவிட்டு வந்தார்.
அறிவிப்பு
கடைசியில், உடம்பு சரியில்லாமல் இருப்பதால் கட்சி ஆரம்பிக்க போவதில்லை என்று ரஜினி அறிவிக்கவும், ரசிகர்களைவிட அளவுக்கு அதிகமாக ஷாக் ஆனது தமிழருவி மணியன்.. உச்சக்கட்ட வெறுப்பினால், அவர் ஒதுங்கியே போய்விட்டார். ஆனாலும் ரசிகர்கள், ரஜினி கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்று தொடர்ந்து அழைத்து வருகின்றனர்.. அதன் ஒருபகுதியாகத்தான், நேற்று வள்ளுவர் கோட்டத்தில் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.
தீர்மானம்
இப்படி ஒரு போராட்டம் வள்ளுவர் கோட்டத்தில் நடந்த அதேசமயம், கோவையில் காந்திய மக்கள் இயக்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டமும் நடைபெற்றது. அதில், காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவராக தமிழருவி மணியன் தலைவராக தொடர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் முக்கிய பதவிகளுக்கான நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். காந்திய மக்கள் இயக்கத்தின் உறுப்பினர்களை அடுத்த ஆறு மாதத்தில் 10 லட்சமாக உயர்த்த திட்டமிட்டுள்ளனர்.
சந்தேகங்கள்
இப்படிப்பட்ட சமயத்தில்தான், ரஜினி மக்கள் மன்றத்துடன் காந்திய மக்கள் இயக்கம் இணைக்கப்படவுள்ளதாக ஒரு தகவல் நேற்று முழுவதும் கசிந்தது.. ரஜினி கட்சி ஆரம்பிக்காத பட்சத்தில், இது எப்படி சாத்தியம்? இதனால் என்ன நன்மை என்று பல சந்தேகங்கள் எழுந்தன.. ஆனால், தற்போது இந்த தகவலுக்கு காந்திய மக்கள் இயக்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மறுப்பு
இது தொடர்பாக அதன் பொதுச் செயலாளர் பா.குமரய்யா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,"சில செய்தி காட்சி ஊடகங்களில் காந்திய மக்கள் இயக்கம், ரஜினி மக்கள் மன்றத்துடன் இணைப்பதாக வந்த செய்தி கற்பனையானது. காந்திய இயக்கம் தனித்து இயங்கும். ரஜினி மக்கள் மன்றத்துடன் காந்திய மக்கள் இயக்கத்தின் தொடர்பு சகோதர பாவத்துடன் நீடிக்கும்" என்று கூறியுள்ளார்.
குழப்பம்
இதுதான் தற்போது பேசுபொருளாக உருவெடுத்துள்ளது.. எதற்காக ரஜினி ரசிகர்கள் போராட்டம் நடத்திய அதே தினம், அதேசமயத்தில் இந்த கூட்டமும் நடந்தது என்று தெரியவில்லை... அதேபோல, இதே தமிழருவி மணியன்தான், இனி இறக்கும் வரை அரசியலில் ஈடுபட மாட்டேன் என்று சொன்னார்.. அப்படி சொன்னவர், திரும்பவும் தனது இயக்கப் பணிகளை தொடங்கியிருப்பது ஏன்? இதற்கு என்ன காரணமாக இருக்கும்? என்ற பல குழப்பத்தையும் கிளப்பி விட்டு வருகிறது!