விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் 2020: கொரோனாவை வதம் செய்யும் விநாயகர்... டாக்டர் விநாயகர்
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி 22ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழ்நாட்டில் கொரோனாவை வதம் செய்யும் விநாயகர், டாக்டர் விநாயகர் சிலைகள் ட்ரெண்டிங் ஆகி வருகின்றன.
சென்னை: பண்டிகைக் காலங்களில் என்ன சம்பவங்கள் நடக்கின்றனவோ அதற்கேற்ப சிலைகள் டிரெண்டிங் ஆக செய்து அசத்துவார்கள். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது என்றாலும் டாக்டர் விநாயகர், கொரோனாவை வதம் செய்யும் விநாயகர் என சிலைகளை செய்து அசத்தி வருகின்றனர் சிலை வடிவமைப்பாளர்கள்.
ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதியில் விநாயகர் அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. யானை தலையும் மனித உருவமும் கொண்ட விநாயகர் முழுமுதற்கடவுளாக வணங்கப்படுகிறார். ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படும் பிரம்மாண்ட சிலைகளை வைத்து பத்து நாட்கள் வழிபடுவார்கள். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா வரும் 22ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
ஆகஸ்ட் 31ஆம் தேதிவரை லாக்டவுன் அமலில் உள்ளது. பண்டிகைகள் கொண்டாட தடை உள்ளது என்றாலும் சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளதால் விநாயகர் சதுர்த்திக்காக விநாயகர் சிலைகள் செய்யும் பணிகள் முழு வேகத்தில் தொடங்கியுள்ளன.
பக்தர்களை கவரும் வகையில் ராணுவ விநாயகர், பாகுபலி விநாயகர் என ஒவ்வொரு ஆண்டும் வித்தியாசமான சிலைகள் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இந்த ஆண்டில் கொரோனா பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாக கொரோனாவை மையப்படுத்தி செய்யப்படும் விநாயகர் சிலைக்கு மக்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியினர் வீடுகளில் கட்சிக் கொடிகள்... கே.எஸ்.அழகிரி முன்னெடுக்கும் புதிய திட்டம்
திருப்பூரில் கொரோனா வைரஸை விநாயகர் காலில் வைத்து மிதித்திருப்பது போன்ற சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. இதே போல விநாயகர் டாக்டர் உடுப்பு போட்டு நோயாளி ஒருவருக்கு சிகிச்சை அளிக்க அவரது வாகனமாக எலி உதவியாளராக இருந்து மருந்து பொருட்களை தாங்கி நிற்கிறது.
இந்த டாக்டர் விநாயகர் எலி நர்ஸ் செட் பக்தர்களிடையேயும் குழந்தைகளிடையேயும் தனி வரவேற்பினை பெற்றுள்ளது. இந்த சிலைகளுக்கு மார்க்கெட்டில் தேவை அதிகரித்துள்ளது அதிக ஆர்டர்களும் கிடைத்து வருவதாக சிலை வடிவமைப்பாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.