விநாயகர் சதுர்த்தி விழா: தடைகளை தகர்க்கும் கடவுளுக்கே தடையா... அனுமதி கொடுங்க - எல்.முருகன்
தடைகளை தகர்க்கும் கடவுளுக்கே தடை போடுவது வேதனையளிக்கிறது என்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார். விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அனுமதியளிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்திருக்கிறார்.
சென்னை: எந்த ஒரு காரியத்தை நடத்தும் முன்பும் முதலில் விநாயகரைத்தான் கும்பிடுவார்கள். அதே போல எந்த ஒரு பிரச்சினை என்றாலும் விநாயகரைத்தான் வணங்குவார்கள். இப்போது விநாயகர் சதுர்த்தி நாளில் விநாயகரை வணங்கவே தடை போடுவது வேதனை அளிக்கிறது என்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் தளர்வுகளுடன் லாக்டவுன் அமலில் உள்ளது. பெரிய கோவில்களை திறக்க அனுமதி இல்லை. பண்டிகை கொண்டாட்டங்களுக்கும் அனுமதி இல்லை.
தமிழகத்தில் லாக்டவுன் அமலில் உள்ள நிலையில், விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவ, ஊர்வலம் செல்ல தடை விதித்து தமிழக அரசு நேற்று அரசாணை வெளியிட்டது. விநாயகர் சதுர்த்தியை அவரவர் வீடுகளிலேயே கொண்டாட தமிழக அரசு அறிவுறுத்தி, கொரோனா காலத்தில் மக்கள் பொது இடங்களில் கூட்டமாக கூடக்கூடாது என்பதால், பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலை வைக்க அனுமதி இல்லை எனவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் விநாயகர் சிலைகளை நிறுவி வழிபடுவதற்கான தடையை தமிழக அரசு நீக்க வேண்டும். விநாயகர் சிலைகளை நிறுவி வழிபடுவதற்கு அனுமதிக்குமாறு தமிழக அரசுக்கு பாஜக மாநில தலைவர் முருகன் கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு கடந்த 40 ஆண்டு காலமாக இருக்கிறது. 1983 முதல் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு ஊர்வலமாக எடுத்துச்சென்று ஆறு குளங்களில் கரைப்பது வழக்கம். இந்த கொரோனா பரவல் காரணமாக விநாயகர் ஊர்வலம் நடத்தப்படாது அதை நாங்களே கை விடுகிறோம்.
விநாயகர் சிலைகளை நிறுவி வழிபட தமிழக அரசு அனுமதி தர வேண்டும். தமிழக அரசு சிறு கோவில்களை திறந்து மக்கள் வழிபட அனுமதி அளித்துள்ளது. அதே போல தனி மனித இடைவெளியோடு விநாயகர் சிலைகளை வழிபட அனுமதி தர வேண்டும்.
உடைகிறது...ராஜஸ்தான் க்ளைமேக்ஸ்...நம்பிக்கை வாக்கெடுப்பு...காங்கிரஸ் தீர்மானம்!!
Recommended Video
பல்வேறு பணிகளுக்காக மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரும் சூழலில் விநாயகர் சிலைகளை நிறுவ தடை ஏன். விநாயகர் வழிபாட்டிற்கு விதிக்கப்பட்ட தடையை தமிழக அரசு மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும். மக்கள் தங்களின் தொழில்களுக்கு எற்பட்ட தடையை நீக்க விநாயகரை வழிபடுவார்கள். இப்போது தமிழக அரசு தடையை தகர்க்கும் கடவுளுக்கே தடை போடுவது வேதனை தருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.