தங்கம் கடத்திய 18 பேர்! தப்பிக்க வைக்க அதிகாரிகளை தாக்கிய கும்பல்! சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு!
சென்னை: சென்னை விமான நிலையம் வழியாக தங்கம் கடத்திய 18 பயணிகளை வருவாய் புலனாய்வு இயக்குநரக (டிஆர்ஐ) அதிகாரிகள் கைது செய்தனர். ஆனால் சில நிமிடங்களில், அடையாளம் தெரியாத கும்பல் அதிகாரிகள் மீது சரமாரி தாக்குதல் நடத்தி பயணிகளை தப்பிக்க வைத்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை சர்வதேச விமான நிலையம் வழியாக தங்கம் கடத்துவது அதிகரித்து வருகிறது. தங்கத்தின் விலை இந்தியாவை விட வெளிநாடுகளில் குறைவாக உள்ளதால் அதை வரி கட்டாமல் கடத்தும் சம்பங்கள் அடிக்கடி நடக்கின்றன
நேற்று மலேசியா, கொழும்பு மற்றும் துபாயில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு 18 பயணிகள் வந்தனர். அவர்களிடம் இருந்து 5.44 கோடி ரூபாய் மதிப்புள்ள 12.69 கிலோ தங்கத்தை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நடந்து வந்தனர்
விசாரணைக்காக 18 பேரை கைது செய்த டி.ஆர்.ஐ அதிகாரிகள் குழு, தேவையான நடைமுறைகளுக்கு பின்னர் அவர்களை ஒரு வாகனத்தில் டி.ஆர்.ஐ அலுவலகத்திற்கு அழைத்துச் செல்வதற்காக திட்டமிட்டு விமான நிலையத்திற்கு வெளியே அழைத்துச் சென்று கொண்டிருந்தனர். விமான நிலையத்தின் வருகை மண்டபத்திற்கு வெளியே அதிகாரிகள் குழு 18 பேரை அழைத்துக் கொண்டு வந்து கொண்டிருந்தனர்.
தப்பிக்க வைத்தது
அப்போது 50 பேர் கொண்ட கும்பல், அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு எழுப்பியும், அதிகாரிகளை தகாத வார்த்தைகளை திட்டியும் தாக்கியும் உள்ளது. அப்போது நடந்த வாக்குவாதத்தை பயன்படுத்தி தங்க கடத்தில் ஈடுபட்ட சிலர் தப்பிச் சென்றனர். இந்த சம்பவத்தில் இரண்டு அதிகாரிகள் கும்பல்கள் தாக்கியதில் லேசான காயம் அடைந்தனர். தங்கம் கடத்தியவர்களை தப்பிக்க வைக்கும் நோக்கில் அதிகாரிகளுடன் அந்த கும்பல் சண்டை போட்டு தகராறு செய்தும் தெரியவந்துள்ளது.
அதிகாரிகள் உதவி
இச்சம்பவத்திற்கு பின் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் வெளியிட்ட அறிக்கையில், சென்னையில் தங்கம் கடத்த பயணிகளுக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் இரண்டு விமான சுங்க அதிகாரிகளுக்கு உள்ள பங்கு குறித்து நாங்கள் விசாரித்து வருகிறோம். கொளத்தூரைச் சேர்ந்த ஒரு அதிகாரியின் இல்லத்தில் நாங்கள் தேடினோம். அவர்.ஆர்.ஐ., உதவியாளர் பணியில் இருந்து சமீபத்தில் விலகிவிட்டார், அவர் கடத்தல்காரர்களுடன் சேர்ந்து தங்கத்தை கடத்துவதற்கு உதவியிருக்கலாம் என்று சந்தேக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
7 பேர் கைது
இதனிடையே தங்க கடத்தல் தொடர்பாக வியாழக்கிழமை, 18 கடத்தல்காரர்களில் 13 பேர் டி.ஆர்.ஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்கள். இதற்கிடையில், மற்றொரு சம்பவத்தில், விமான நிலைய அதிகாரிகள் சென்னை விமான நிலையத்திலிருந்து கடத்த முயற்சித்த ரூ .2.28 கோடி மதிப்புள்ள 5 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.