குடிபோதை பழசு.. இப்போ நடுங்க வைக்கிறது கஞ்சா.. போதையில் தமிழக அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர்கள்
சென்னை: சென்னையை அடுத்த காஞ்சிபுரத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலையில் பட்டப்பகலில் , கஞ்சா போதையில் இளைஞர்கள் சிலர் அரசு பஸ் கண்ணாடியை பட்டாக்கத்தியால் அடித்து நொறுக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மது குடித்து விட்டு அலம்பல் செய்யும் குடிமகன்கள் குறித்த செய்திகள் எல்லாம் போய் இப்போது கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை பயன்படுத்திவிட்டு பொதுவெளியில் அச்சமூட்டும் வகையில் நடந்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
போதைப்பொருட்கள் பயன்பாடு தமிழகத்தில் அதிகரித்து விட்டதாக ஒருபக்கம் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. தமிழக அரசும் போதைப்பொருட்கள் பயன்பாட்டை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஜல்லிகட்டில் விதிமீறல்கள் இருக்காது! உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்த தமிழக அரசு!
கஞ்சா போதையில்..
ஆனாலும் அண்டை மாநிலங்களில் இருந்து பல்வேறு வழிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் எடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. இதனால், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் நடமாட்டத்தை ஒழிப்பது கடும் சவாலாகவே இருந்து வருகிறது. கஞ்சா போதையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடப்பது, பட்டா கத்தியுடன் மிரட்டல் விடுப்பது என போதையில் இத்தகைய நபர்கள் செய்யும் அட்டகாசம் எல்லை மீறி வருகிறது.
அரசு பேருந்தின் கண்ணாடியை
சில இடங்களில் பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. சென்னை போன்ற பெருநகரங்களில் கூட கஞ்சா போதையில் சில சமூக விரோதிகள் செய்யும் அட்டகாசங்கள் பொதுமக்களை பயமுறுத்தும் வகையிலும் முகம் சுழிக்க வைக்கும் வகையிலும் அமைந்து வருகிறது. அந்த வகையில், சென்னையை அடுத்துள்ள காஞ்சிபுரத்தில் கஞ்சா போதையில் வந்த மூன்று இளைஞர்கள் அரசு பேருந்தின் கண்ணாடியை அரிவாளால் உடைத்து சேதப்படுத்திய சம்பவம் அங்கிருந்த பயணிகளை அதிர்ச்சியில் உறைய வைத்தது.
ஹார்ன் அடித்துக்கொண்டே வந்த...
87 என்ற தடம் கொண்ட அரசு நகர பேருந்து ஒன்று காஞ்சிபுரத்தில் இருந்து கண்ணம் தாங்கல் கிராமப் பகுதிக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் சுப்பிரமணியன் என்ற ஓட்டுநரும் சாரங்கன் என்ற நடத்துனரும் பணியில் இருந்தனர். பேருந்தில் 30 க்கும் மேற்பட்ட பெண் பயணிகளும் இருந்தனர். பேருந்து சென்று கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் பின்னால் வந்த 3 இளைஞர்கள் ஹார்ன் அடித்துக்கொண்டே வந்ததாக கூறப்படுகிறது.
முன்பக்க கண்ணாடி மீது பட்டாகத்தியால்
இது இடையூறாக இருந்ததால் , அரசு பேருந்து ஓட்டுநர் சுப்பிரமணியன், இது குறித்து இளைஞர்களிடம் கேட்டுள்ளார். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்களுக்கும் சுப்பிரமணியனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இளைஞர்கள் மூன்று பேரும் கஞ்சா போதையில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. வாக்கு வாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த போதே.. திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியை எடுத்த இளைஞர்கள் பேருந்தின் முன்பக்க கண்ணாடி மீது பட்டாகத்தியால் அடித்துள்ளனர்.
சிசிடிவி காட்சிகள் வெளியாகி..
இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இந்தசம்பவத்தால் பேருந்தில் இருந்த பெண் பயணிகள் அலறி அடித்து பேருந்தில் இருந்து இறங்கினர். வாகன போக்குவரத்து எப்போதும் பரபரப்பான சாலையில் நடந்த இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் , இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கஞ்சா புழக்கத்தை முற்றிலும் ஒழிக்க..
சமீபகாலமாக இதுபோன்ற கஞ்சா போதையில் அச்சுறுத்தும் வகையில் இளைஞர்கள் நடந்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கல்லூரி இளைஞர்கள் கூட கஞ்சா போதைக்கு அடிமையாகி எதிர்காலத்தை பாழ்படுத்திக்கொள்வதாக கவலை தெரிவிக்கும் சமூக ஆர்வலர்கள், காவல்துறையினர் இன்னும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு கஞ்சா நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.