விநாயகர் சதுர்த்தி.. பொது இடங்களில் சிலை வைக்க தடை.. தமிழகம் முழுக்க போலீசார் குவிப்பு!
சென்னை: விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுக்க பொது இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுக்க இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. விநாயகரின் பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில் இந்த விழா இன்று நடக்கிறது. இதற்காக நாடு முழுக்க மக்கள் தீவிரமாக தயாராகி வருகிறார்கள்.
விநாயகர் சதுர்த்தியின் போது பொது இடங்களில் பெரிய பெரிய விநாயகர் சிலையை வைத்து வழிபாடு நடத்துவார்கள். அதன்பின் 3 நாட்கள் அல்லது 5 நாட்கள் கழித்து அதை ஊர்வலமாக எடுத்து சென்று கடலில் அல்லது ஆற்றில் கரைப்பார்கள்.
ஆனால் தமிழகத்தில் விநாயகர் சிலையை பொதுவில் வைக்க தடை உள்ளது. கொரோனா பாதிப்பு நிலவி வருவதால், இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிலைகளை ஊர்வலமாகச் சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை.. நாடு முழுக்க விமர்சையாக கொண்டாட்டம்.. தலைவர்கள் வாழ்த்து!
இதற்கு இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்து அமைப்புகள் பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சென்னை ஹைகோர்ட்டும் தமிழக அரசின் தடையை நீக்க மறுத்துவிட்டது. அதே சமயம் வீடுகளில் வைத்து வழிபடப்படும் விநாயகர் சிலைகளை கரைக்கலாம் என்றும், மெரினா கடற்கரை தவிர்த்த பிற இடங்களில் சிலையை சமூக இடைவெளியுடன் கரைக்கலாம் என்றும் சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுக்க பொது இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அசம்பாவிதங்கள் நடக்க கூடாது, தடையை மீறி சிலைகளை கொண்டு செல்ல கூடாது என்பதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.