அக்னி பாத் திட்டத்தை சும்மா ஒன்றும் எதிர்க்கவில்லை! இது தான் காரணம்! காங்கிரஸ் தந்த டீடெயில்!
சென்னை: ராணுவப் பணியில் சேர விரும்பும் இளைஞர்களின் எதிர்காலத்தை சூன்யமாக்கும் வகையில் பல பாதகங்கள் அக்னிபாத் திட்டத்தில் இருப்பதாக கூறுகிறார் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தேர்தல் அதிகாரியும், எம்.பி.யுமான கவுரவ் கோகாய்.
இவர் அஸாம் முன்னாள் முதலமைச்சர் தருண் கோகாயின் மகன் ஆவார். சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகமான சத்திய மூர்த்திபவனுக்கு வருகை தந்த அவர் இது தொடர்பான விரிவாக விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அதன் விவரம் வருமாறு;
எங்க ஆபிஸ்ல.. அக்னி வீரர்களுக்கு செக்யூரிட்டி பணி தருவோம்.. சர்ச்சையாகும் பாஜக நிர்வாகியின் பேச்சு!
அக்னிபத் திட்டம்
''இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த ஜூன் 14ஆம் தேதியன்று அக்னிபத் திட்டம் குறித்து அறிவித்தார். இளைஞர்களை ராணுவத்தில் தற்காலிகமாக பணி நியமனம் செய்வதே இந்த அக்னிபத் திட்டம். அதாவது ஆறு மாத பயிற்சி, 42 நாள் பணி என்பது தான் அக்னிபத் திட்டம். இதன்மூலம் 46 ஆயிரம் பேரை வேலைக்கு சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இவர்களது பணிக்காலம் முடிந்ததும், இதில் 75 சதவிகிதம் அதாவது, 34,500 பேர் வேலையிலிருந்து நீக்கப்படுவார்கள். மீதியுள்ள 11,500 பேர்களுக்கு வேலை தொடர்ந்து வழங்கப்படும்.''
பேராபத்து
''ஆறு மாத ராணுவ பயிற்சியில் ஆயுதத்தை பயன்படுத்துகிற பயிற்சியும் வழங்கப்படுகிறது. ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டு ராணுவத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் எதிர்காலத்தில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துவார்கள் என்பது குறித்து மத்திய அரசு கவலைப்படவில்லை. நாட்டில் பெருகி வருகிற தீவிரவாத, பயங்கரவாத சக்திகளின் பிடியில் ஆயுத பயிற்சி பெற்ற முன்னாள் ராணுவ வீரர்கள் சிக்கிக் கொள்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. இது இந்தியாவின் பாதுகாப்பிற்கும், சமூக நல்லிணக்கத்திற்கும் பேராபத்தை விளைவிக்கக் கூடியதாகும''.
தமிழகத்திலும் எதிர்ப்பு
''அக்னிபத் திட்டத்துக்கு பிகார், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா, தெலங்கானா, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழ்நாட்டின் வேலூரில் ராணுவ பணியில் சேர ஆர்வம் மிகுந்த இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிகார், உத்தரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் அக்னிபத் திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் ரயில்களுக்கு தீ வைத்தனர். பல்வேறு இடங்களில் ரயில்வே அலுவலகங்கள் சூரையாடப்பட்டன.''
இரண்டு ஆண்டுகளாக
''கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக முப்படைகளுக்கான ஆள்சேர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் தங்களுடைய எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். அக்னிபத் திட்டத்தில் சேருபவர்களுக்கு ஓய்வூதியம் இல்லை.''
வேலை வாய்ப்பு
''நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி பேர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவோம் என்று பிரதமர் மோடி 2004 தேர்தலில் வாக்குறுதி வழங்கினார். கடந்த 8 ஆண்டுகளில் 16 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கியிருக்க வேண்டும். ஆனால், 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடி வருகிறது. இந்திய பொருளாதாரம் மிகப்பெரிய பேரழிவை சந்தித்து வருகிறது.''
வேலையில்லாத் திண்டாட்டம்
''வேலையில்லாத் திண்டாட்டத்தை தீர்ப்பதில் முழு தோல்வியடைந்த பா.ஜ.க. அரசு இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி சூன்யமாக்குகிற அக்னிபத் திட்டத்தை நிறைவேற்ற தீவிரமாக முனைகிறது. இதை நாட்டிலுள்ள இளைஞர்கள் கடுமையாக எதிர்த்து போராடுகிறார்கள்.''
234 தொகுதிகள்
''இந்தியாவில் உள்ள இளைஞர்களின் வேலை வாய்ப்புக்கு உத்தரவாதம் தராத அக்னிபத் திட்டத்தை மத்திய பா.ஜ.க. அரசு திரும்பப் பெற வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடு முழுவதும் ஜூன் 27 ஆம் தேதி மாபெரும் போராட்டம் நடத்த வேண்டுமென ராகுல்காந்தி வலியுறுத்தியிருக்கிறார். அதன்படி தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, அக்னிபத் திட்டத்தை எதிர்த்து தீவிரமான போராட்டத்தை நடத்த இருக்கிறோம்.''