அப்பப்பப்பா.. எத்தனை சர்ச்சைகள், புகார்கள், புகழ்கள்.. மறக்க முடியாத கீதாலட்சுமி
எம்ஜிஆர் மருத்துவ பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி பணி ஓய்வு பெற்றார்.
Recommended Video
சென்னை: எத்தனையோ புகார்கள், சர்ச்சைகள், புகழ்கள், சாதனைகளுக்கிடையே பணியாற்றிவிட்டு கடைசியில் பணி ஓய்வு பெற்று கிளம்பி விட்டார் எம்ஜிஆர் மருத்துவ பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி!!
சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் சாதாரண மருத்துவராகதான் இருந்தார் கீதாலட்சுமி. அப்போதே இவர் மீது நிறைய லஞ்ச புகார்கள் வந்ததுதான் ஆச்சரியம்.
மருத்துவ மாணவர்களை வைவா, ஹவுஸ் சர்ஜன் போன்ற பிரிவுகளில் தேர்ச்சி பெற வைக்க லஞ்சமாக பட்டுப்புடவைகளை வாங்கிக்கொண்டு இருந்தார் என்று கூறப்பட்டது.
அமைச்சரின் உதவி
பின்பு கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் வட்டாரத்தில் நட்பு ஏற்படுத்தி கொண்டு, ஒரு அமைச்சர் மூ லம் மருத்துவக் கல்வி இயக்குநராகப் பதவிக்கு வந்தார் என்றும் சொல்லப்பட்டது. இந்த பொறுப்புக்கு வந்ததும் லஞ்சப் பணம் அதிகமானதாக அதாவது, ஒரு டாக்டர் டிரான்ஸ்பருக்கு பத்து லட்சம் ரூபாய் கமிஷன் பெறுகிறார் என்று கூறப்பட்டது.
சர்ச்சைகள்
இதைதவிர பணி மருத்துவ துறையில் எந்த பணி நியமனம் தொடர்பாக இருந்தாலும் அங்கேயும் பணம்தான் என்றும், இவரிடமிருந்துதான் அமைச்சர் விஜயபாஸ்கருக்குப் பணம் செல்லும் என்றும் தகவல்கள் பறந்தன. இப்படி பணம் பணம் என்றுதான் சர்ச்சைகள் கீதா லட்சுமியை சூழ்ந்தன.
வருமான வரித்துறை
ஆனால் என்னமோ தெரியவில்லை. ஜெயலலிதாவுக்கு இவர் மீது தனி பிரியம் இருந்தது. மருத்துவக்கல்லூரி இயக்குநராக இருந்து ஓய்வு பெற்றதும் அடுத்த நாளே, இவருக்கு மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவியை அளித்து அழகு பார்த்தார். பதவிகள் உயர உயர லஞ்ச பணத்தின் மதிப்பும் கூடிக் கொண்டே போனதாக சொல்லப்பட்டது. இது சம்பந்தமாக வருமான வரித்துறை சோதனை கூட ஒருமுறை நடத்தியது.
டிஜிட்டல் மயம்
ஆனால் இவர் மீதான லஞ்ச புகார்கள் நிரூபணம் ஆனதோ இல்லையோ, மருத்துவ பல்கலையின் செயல்பாடுகளில் சில நல்லமாற்றங்களை கீதாலட்சுமி செய்தே இருக்கிறார். பல்கலையில் அனைத்தையும், டிஜிட்டல் மயமாக்கினார். வினாத்தாள் திருத்தும் பணியை, இணையதளத்திற்கு மாற்றினார். அது மட்டுமல்ல, ஹோமியோபதி மருத்துவத்தில், எம்.டி., முதுகலை மற்றும் பிஎச்.டி., படிப்பு வர காரணமாகவும் இருந்தார்.
ஊழல் புகார்
கீதாலட்சுமியின் மருத்துவ சேவையைப் பாராட்டி, மருத்துவத்துறையில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் பி.சி.ராய் விருது வழங்கியது மோடியின் மத்திய அரசு. தற்போது கீதாலட்சுமி ஓய்வு பெற்றுவிட்டாலும், அமைச்சர் விஜயபாஸ்கருடன் இணைந்து ஊழல் புகாரில் சிக்கியது ஒரு கறையாகவே மருத்துவ துறை மீது படிந்து போய் விட்டது. ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்த கீதாலட்சுமி விடைபெறுவதும், அவருக்குப் பிடித்த இன்னொருவரான சுதா சேஷையன் துணை வேந்தராக வருவதும் குறிப்பிடத்தக்கது.