3லிருந்து 40 வரை.. பாஜகவின் அபார வளர்ச்சி.. ஹைதராபாத்தில் "காவி"யின் கலக்கல்!
ஹைதராபாத்தையும் கைப்பற்றுமா பாஜக என்ற ஆர்வம் எழுந்து வருகிறது
சென்னை: ஒரு சாதாரண வார்டு தேர்தல்தான் ஹைதராபாத்தில் நடந்து முடிந்தது.. இதற்கு ஏன் தேசிய கட்சியான பாஜக இவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டும் என்ற கேள்வி ஆரம்பத்தில் இருந்தே எழுந்தது. ஆனால் தற்போது அக்கட்சி அங்கு பெற்றுள்ள வெற்றி மிகப் பெரியது என்பதில் சந்தேகம் இல்லை.
கடந்த 2016-ல் இதே ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில், இதே 150 வார்டுகளில், டிஆர்எஸ் 99 இடங்களை கைப்பற்றியது.. அதன் கூட்டணி கட்சியான அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் 44 இடங்களை கைப்பற்றியது..
ஆனால் பாஜகவோ வெறும் 3 இடங்களில்தான் வெற்றி பெற்றது.. இதைவிட இன்னொரு தேசிய கட்சியான காங்கிரஸோ வெறும் 2 தான் பிடித்தது.
கூட்டணி
இதற்கு பிறகு நடந்த 2018 சட்டமன்றத் தேர்தலில் டிஆர்எஸ் கூட்டணியானது 119 இடங்களில் 114 இடங்களை கைப்பற்றி மாஸ் வெற்றி பெற்றது.. அதேசமயம், 2019-ல் நடந்த எம்பி தேர்தலில் நாடாளுமன்றத் தேர்தலில் டிஆர்எஸ் வசமிருந்த 4 முக்கிய தொகுதிகளை பாஜக கைப்பற்றியது... அப்போது ஆரம்பித்ததுதான் பாஜகவின் டேக் ஆப்! சமீப காலமாக நடந்த இடைத்தேர்தல் முதல் இன்றைய தேர்தல் முடிவு வரை டாப் கியர் போட்டு மேலே வருகிறது.
அமித்ஷா
இதற்கெல்லாம் என்ன காரணம்? ஒரு சாதாரண வார்டு தேர்தலை இந்த அளவுக்கு பாஜக முக்கியத்துவம் தந்து பார்க்க என்ன காரணம்? அமித்ஷா, ஜேபி நட்டா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ஸ்மிருதி இரானி, வானதி சீனிவாசன் என இத்தனை சீனியர்கள் ஹைதராபாத் பிரச்சாரத்துக்கு ஏன் சென்றார்கள்? இதற்கென தனியாக ஒரு தேர்தல் அறிக்கையை ஏன் வெளியிட்டனர்? என்ற குழப்ப கேள்விகளும் எழவே செய்கின்றன.
சந்திரசேகர் ராவ்
2 விஷயம்தான்.. ஒன்று, சந்திரசேகர் ராவின் டென்ஷனை அதிகப்படுத்துவது.. இத்தனை தலைவர்கள் திரண்டு வந்து, பிரச்சாரம் செய்தபோதே லேசான கிலி எதிர்தரப்புக்கு ஏற்பட்டது.. ஹைதராபாத் பெயரை மாற்றுவோம் என்று ஒரு பாரம்பரிய விஷயத்தில் யோகி "கை" வைத்து சீண்டியது, இந்த தேர்தலை மேலும் தீவிரமாக்கியது.. "ஹைதராபாத்தை நிஜாம் நவாப் கலாசாரத்திலிருந்து விடுவித்து காட்டுகிறோம்" என்று அமித்ஷா பேசியபோது இன்னும் தேர்தலின் உக்கிரம் வெளிப்பட்டது.
பாகிஸ்தானியர்கள்
"பாஜக வெற்றி பெற்றால், சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் மூலம் ரோஹிங்கியாக்கள் பாகிஸ்தானியர்கள் விரட்டப்படுவார்கள்" என்று தெலுங்கானா பாஜக சொன்னது அதைவிட உச்சக்கட்ட பரபரப்பில் கொண்டுபோய் தேர்தலை களத்தை முன்னிறுத்தியது... அதாவது ஒரு பிரச்சாரத்தின் மூலமே எதிர்க்கட்சிகளை வெலவெலக்க செய்ததுதான் பாஜகவின் முதல் வெற்றியாகும்!
ஹைதராபாத்
இன்னொரு காரணம், கீழ் மட்டத்திலிருந்து தங்களை பலப்படுத்தி கொண்டு வருவதுதான் பாஜகவின் சமீபகால ஸ்டைல் ஆகும்.. அதனால்கூட ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலுக்கு இப்படி ஒரு முக்கியத்துவத்தை தந்திருக்கலாம் போலும்.. அதைவிட முக்கியமாக, ஒவைசியின் கட்சியை கதற விடும் அளவுக்கு அதனை பலம் இழக்க செய்வதும் பாஜகவின் இன்னொரு பிளான் ஆகும்.
ஓவைசி
ஏனென்றால் பீகார் தேர்தலில் ஓவைசியின் எழுச்சியும், அவர் 5 இடங்களை கைப்பற்றியதும் பாஜகவுக்கு உறுத்தி கொண்டே இருந்த விஷயம்.. இதை மனசில் வைத்துதான் இந்த முறை அதிரடியை கிளப்பியது.. அதனால்தான் "மதத்தை" வழக்கம்போல் பிரச்சாரத்தில் கொண்டு வந்து நிறுத்தியது பாஜக!
அறுவடை
அதன் பலனைதான் இன்று வெற்றியால் அறுவடை செய்து கொண்டிருக்கிறது.. பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா பிரச்சாரம் செய்யும்போது ஒரு வார்த்தையை சொன்னார்.. "தென்னிந்தியா முழுவதும் காவிமயமாகும் என்றார். எதை மனசில் வைத்து கொண்டு அவர் இந்த அளவுக்கு உறுதியாக சொன்னார் என்று தெரியவில்லை.. இந்த வார்டு தேர்தல் மூலம், சந்திரசேகருக்கு ஒரு ஜெர்க் தந்துள்ளது பாஜக.. ஓவைசிக்கு ஒரு ஷாக் தந்துள்ளது பாஜக.. மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்று தெலங்கானா ராஷ்டிர சமிதிக்கு ஒரு பாடம் கற்பித்துள்ளது பாஜக..