ஜூன் 30-ல் ஓய்வு பெறும் கிரிஜா வைத்தியநாதன்.. சென்னை தலைமைச்செயலகத்தில் பிரிவு உபசார விழா
Recommended Video
சென்னை: தமிழக தலைமைச் செயலாளராக உள்ள கிரிஜா வைத்தியநாதனுக்கு, சென்னை தலைமைச்செயலகத்தில் பிரிவுபசார விழா நடைபெற்று வருகிறது.
தற்போது தமிழக தலைமைச் செயலாளராக இருப்பவர் கிரிஜா வைத்தியநாதன். இவர் வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் ஓய்வு பெற உள்ளார். இவரது தந்தை வெங்கிடரமணன் 1990 - 1992 காலக்கட்டத்தில், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தவர்.
இவர் பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான எஸ். வி. சேகரின் மைத்துனியாவார். கிரிஜா வைத்தியநாதன் இயற்பியலில் முதுநிலை படிப்பும், நல வாழ்வு பொருளாதாரத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர்.1981-ம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணி தேர்வில் பெண்களில் முதல் இடத்தையும், தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களில் ஒன்பதாவது இடத்தையும் பெற்றார்
2011-ல் சுகாதாரச் செயலராக இருந்த கிரிஜா வைத்தியநாதன், ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தை புதிதாக வடிவமைத்தவர் ஆவார். நிதித்துறை, பள்ளிக் கல்வித் துறை, நில நிர்வாகத் துறை, சுகாதாரத்துறை, வேளாண்மைத் துறைகளில் மாநில அளவில் பணியாற்றிய அனுபவமும் இவருக்கு உண்டு.
தங்கம், தகரத்தைவிட எங்க அஞ்சா நெஞ்சர் குறைந்து போயிட்டாரா என்ன.. அழகிரி ஆதரவாளர்கள் குமுறல்
2016-இல் கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி வகித்து வந்த கிரிஜா வைத்தியநாதன், நில நிர்வாகம் மற்றும் வருவாய் துறை ஆணையராகவும் பொறுப்பு வகித்து வந்தார். கடந்த 2016ம் ஆண்டு டிசம்பரில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலராக கிரிஜா வைத்தியநாதன் பணியமர்த்தப்பட்டார், நிர்வாக சீர்திருத்தம், கண்காணிப்பு ஆணையர் ஆகிய பதவிகள் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டன.
தமிழகத்தின் தலைமை செயலராக உள்ள கிரிஜா வைத்தியநாதன் வரும் ஜூன் 30ம் தேதியுடன் பணி ஓய்வு பெறுகிறார், இதனையடுத்து இவரது பதவியைப் பிடிக்க நிதித்துறை செயலாளர் சண்முகம், உள்ளாட்சித்துறை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, கவர்னரின் செயலாளர் ராஜகோபால், வீட்டு வசதித்துறை செயலாளர் கிருஷ்ணன் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது
இதில் நிதித்துறை செயலாளர் சண்முகத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆசி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தமிழக புதிய தலைமைச்செயலாளராக நியமிக்கப்பட உள்ளதாக வெளியான தகவலையடுத்து, சண்முகத்திற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், அனைத்து துறைச் செயலாளர்கள் சார்பில் கிரிஜா வைத்தியநாதனுக்கு தற்போது பிரிவுபசார விழா நடைபெற்று வருகிறது.