25 வருஷம் உழைச்சாச்சு! மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்! மேடையில் உருகிய ’முன்னாள்’ தலைவர் ஜி.கே.மணி!
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சிக்காக 25 வருடம் உழைத்த தனக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், இத்தனை ஆண்டுகளில் யாரையாவது தான் தவறாக பேசியிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக பாமக முன்னாள் தலைவர் ஜி.கே.மணி உருக்கமாகப் பேசினார்.
Recommended Video
பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் வரும் 28ஆம் தேதி அதாவது சனிக்கிழமையான இன்று காலை 11.00 மணிக்கு சென்னையை அடுத்த திருவேற்காடு பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும் சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்கு கட்சித் தலைவர் ஜி.கே. மணி தலைமை வகித்தார்
அதிர்ந்த அரங்கம்! தலைவரானார் அன்புமணி! உற்சாகமான பாட்டாளிகள்! மேடையில் அரங்கேறிய சுவாரசிய நிகழ்வுகள்
பாமக பொதுக்குழு கூட்டம்
இந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் புதிய தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கான தீர்மானத்தை ஜி.கே.மணி வாசித்தார். அதில்," பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக கடந்த 01.01.1998 முதல் பணியாற்றி வரும் ஜி.கே. மணி அவர்கள் கடந்த 25 ஆண்டுகளாக கட்சியை சிறப்பாக வழி நடத்திச் செல்கிறார். பாட்டாளி மக்கள் கட்சி இதுவரை சந்தித்த 9 மக்களவைத் தேர்தல்களில் 6 தேர்தல்களையும், 7 சட்டப்பேரவைத் தேர்தல்களில் 5 தேர்தல்களையும் ஜி.கே.மணி அவர்கள் தலைமையில் தான் எதிர்கொண்டிருக்கிறது." புகழாரம் சூட்டப்பட்டது.
ஜிகே மணி தீர்மானம்
மேலும்," மிகவும் நெருக்கடியான கால கட்டங்களிலும் கூட பாட்டாளி மக்கள் கட்சி எனும் பெருங்கப்பலை தடுமாறாமல் சிறப்பாக நடத்திச் சென்ற மாலுமி ஜி.கே.மணி என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பதவியை 25 ஆண்டுகள் அலங்கரித்த நிலையில், தமிழக அரசியலில் பாட்டாளி மக்கள் கட்சியை அடுத்த நிலைக்கும், ஆட்சிப் பொறுப்புக்கும் அழைத்து செல்லும் வகையில் கட்சித் தலைவர் பொறுப்பை அடுத்த தலைமுறையின் கைகளில் ஒப்படைக்க வேண்டும் என்ற விருப்பத்தை ஜி.கே. மணி அவர்கள் கட்சியின் நிறுவனரிடமும், நிர்வாகிகளிடமும் தெரிவித்தார்." என கூறப்பட்டிருந்தது.
தீர்மானம் நிறைவேற்றம்
தொடர்ந்து கட்சியின் இளைஞரணித் தலைவராக இருக்கும் அன்புமணி ராமதாசை கட்சியின் தலைவராக பதவி ஏற்க பொதுக்குழு அழைப்பு விடுப்பதாகவும் இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது என ஜி.கே.மணி கூறினார். இதையடுத்து மேடையிலிருந்த மூத்த நிர்வாகிகளும் மண்டபத்தில் அமர்ந்திருந்த தொண்டர்களும் அன்புமணி தலைவராக பொறுப்பேற்றதற்கு பலத்த கரகோஷம் எழுப்பி வாழ்த்துக்களை கூறினர். இதையடுத்து அன்புமணி பாமகவில் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மன்னிப்பு கேட்டார்
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் தலைவரான ஜிகே மணி," தொடர்ந்து 25 ஆண்டுகள் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் கட்சியின் தலைவராக பணியாற்றியதாகவும், 25 ஆண்டுகளாக தலைவராக இருந்த தனக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், பாதங்களை தொட்டு வணங்குவதாகவும், தான் பதவி வகித்த காலத்தில் யாருக்காவது மனம் நோகும் வகையில் செயல்பட்டு இருந்தாலோ, நடந்திருந்தாலோ அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என மிகவும் உணர்ச்சிபூர்வமாக பேசினார் ஜிகே மணி.