கூட்டணி அமைச்சரவையே கிடையாது.. பாஜக, பாமகவை மறைமுகமாக தாக்கிய ஜெயக்குமார்.. அடுத்த சிக்கல்?
சென்னை : தமிழகத்தில் கூட்டணி அமைச்சரவை என்ற பேச்சுக்கே இடமில்லை, ஜி.கே.மணியின் கருத்து அக்கட்சியின் அதிகாரப்பூர்வ கருத்தாக ஏற்க முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
Recommended Video
சென்னை ராயபுரத்தில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் மேல்நிலைப்பள்ளியில் 5 பள்ளியை சேர்ந்த மாணவர்களுக்கு 738 விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தமிழக அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார்.
பின்னர் பள்ளி மாணவர்களிடம் அறிவு சார்ந்த கேள்விகளை கேட்டு சரியான பதில் அளித்த 15 மாணவர்களு க்கு தலா 500 ரூபாய் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தான் பாஜக, பாமக, தமாகா ஆகிய கட்சிகள் உள்ளன. இந்த கூட்டணியே வரும் சட்டமன்ற தேர்தலில் தொடரும் .இதில் எந்த மாற்றமும் இல்லை.
பாமகவுக்கு அதிகாரம்
அதிமுக முடிவின் படி முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் கூட்டணிக் கட்சிகள் அனைவரும் இதை ஏற்றுக் கொள்வார்கள். முதல்வர் வேட்பாளர் குறித்து பாஜக மேலிட பொறுப்பாளர் மற்றும் மாநில தலைவர் முடிவு செய்யும் அதிகாரம் கிடையாது.. பாஜக தேசிய தலைமை மாறுபட்ட கருத்தை கூற மாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அதிமுகவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.
ஜிகே மணி கருத்து
தமிழ்நாட்டில் கூட்டணி அமைச்சரவை என்ற பேச்சுக்கே இடமில்லை. அதிமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பாக அமைக்கப் பட்டுள்ள குழு ‘முடிவு செய்யும். அதிமுக கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் போகாது என்றார். முதல்வர் வேட்பாளர் குறித்து பாமக நிறுவனர் தான் அறிவிப்பார் என்ற ஜிகே மணியின் கருத்துக்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், பாமக தலைவர் ஜி.கே.மணியின் கருத்தை அக்கட்சியின் அதிகாரப்பூர்வ கருத்தாக எடுத்துக் கொள்ள முடியாது.
ஜெயக்குமார் தாக்கு
தமிழக அரசின் கடன் சுமை குறித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலின் விமர்சனத்திற்கு பதிலளிக்கையில், கமலஹாசன் அரசியலிலும் நடித்து வருகிறார். அரசியலில் ஆஸ்கார் விருது வழங்கினால் அது கமலஹாசனுக்கு அளிக்கலாம். எந்த மாநிலமும் கடன் வாங்காமல் வளர்ச்சி அடைய முடியாது. உலகில் கடன் வாங்காத மாநிலம்/நாடு உண்டா? என கேள்வி எழுப்பினார்..
குரூப் தேர்வு
தொல்லியல் துறையில் தமிழ் தெரியாதவர்கள் தேர்வு செய்ய இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டிற்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார்,
டிஎன்பிஎஸ்சி அரசு சட்டத்தின் படி தான் செயல்படும். தமிழ் தெரியாமல் யாரும் குரூப் தேர்வுகளில் வெற்றி பெற முடியாத நிலையை தமிழக அரசு உருவாக்கி உள்ளதாக தெரிவித்தார்..
அதிமுக புகழ் வெளிச்சம்
தொடர்ந்து அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் சர்ச்சை ஏன் என்ற கேள்விக்கு, திமுக ஒரு ஓடாத சினிமா அதைப் பற்றி யாரும் பேச மாட்டார்கள் என எனவும், தாங்கள் புகழ் வெளிச்சத்தில் இருப்பதால் தங்களைப் பற்றி அதிகம் பேசுவதாகவும் தெரிவித்தார்.