மூப்பனார், ஜெ., சசிகலா- தினகரனிடம் உச்சகட்ட விசுவாசத்தின் அடையாளமாக இருந்தவர் வெற்றிவேல்!
சென்னை: தாம் ஏற்றுக் கொண்ட கட்சியின் தலைமைகளுக்கு மிக மிக விசுவாசமாகவும் நம்பிக்கைக்குரியவராகவும் இருந்தவர், கொரோனா பலிகொண்டுவிட்ட அமமுக பொருளாளர் வெற்றிவேல்.
1990களின் தொடக்கங்களில் சென்னையில் காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர்களில் ஒருவராக இருந்தார் வெற்றிவேல். 1996-ல் காங்கிரஸ் பிளவுபட்டு மூப்பனார் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் உதயமானது.
அப்போது சென்னை மாநகராட்சியில் தமாகாவும் தனி செல்வாக்குடன் இருந்தது. சென்னை மாநகராட்சி தமாகா குழு தலைவராக பணியாற்றியவர் வெற்றிவேல். அந்த காலகட்டத்தில் தமாகாவின் வெற்றிவேல், ராயபுரம் மனோ மற்றும் காங்கிரஸ் கட்சியின் கராத்தே தியாகராஜன் எனும் மூவர் அணிதான் சென்னை மாநகராட்சியில் கோலோச்சியவர்கள்.
கொரோனாவால் அமமுக பொருளாளர் வெற்றிவேல் காலமானார்!
தமாகா டூ அதிமுக
ஜி.கே. மூப்பனார் மறையும் வரை அவரது முதன்மையான விசுவாசிகளில் ஒருவராக இருந்தார் வெற்றிவேல். மூப்பனார் மறைந்த நிலையில் அதிமுகவின் கதவுகள் வெற்றிவேலுக்கு திறக்கப்பட்டது. அங்கும் தனது உச்சகட்ட விசுவாசத்தை நெருடல் ஏதுமின்றி காட்டியவர் வெற்றிவேல். 2011 சட்டசபை தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானார் வெற்றிவேல்.
ஜெ.வுக்காக எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா
அதேகாலகட்டத்தில் சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டு ஶ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை இழந்திருந்தார் ஜெயலலிதா. பின்னர் சிறையில் இருந்து மீண்ட நிலையில் ஜெயலலிதா மீண்டும் தேர்தலில் போட்டியிட்டார். அப்போது ஜெயலலிதாவுக்காக தம்முடைய ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து அங்கு ஜெயலலிதாவை போட்டியிட வைத்து அமோக வெற்றி பெற வைத்தார்.
சசிகலா,தினகரனின் தளபதி
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலாவின் தளபதிகளில் ஒருவரானார். சசிகலா, தினகரன் அணியின் பிரதான தளபதியாக நம்பிக்கைக்குரியவராக இருந்தவர் வெற்றிவேல். முதல்வர் எடப்பாடி அரசால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களில் வெற்றிவேலும் ஒருவர். ஆனால் கடந்த ஆண்டு பெரம்பூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட வெற்றிவேல் சுமார் 6,000 வாக்குகளைத்தான் பெறவும் முடிந்தது.
ஜெ. அன்பழகனை தொடர்ந்து வெற்றிவேல்
இருந்தபோதும் சசிகலா- தினகரன் மீதான விசுவாசத்தால் அதே முகாமிலேயே நீடித்தார். தினகரனின் அமமுக பொருளாளராகவும் பதவி வகித்தார். ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக மட்டுமல்ல தமிழகத்தின் பல்வேறு மிக முக்கியமான அரசியல் ரகசியங்களை அதிகம் அறிந்த நபரும்கூட வெற்றிவேல். இப்போது கொரோனா அவரை காவு கொண்டு போய்விட்டது. சென்னை மாநகரத்தில் திமுகவின் இளம் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த ஜெ. அன்பழகன் கொரோனாவுக்கு பலியானார். அதேபோல் அதிமுக தொண்டர்களிடம் பெரும் மதிப்பை பெற்ற வெற்றிவேல் இப்போது கொரோனாவால் மரணம் அடைந்திருப்பது அரசியல் கட்சிகளுக்கு பேரதிர்ச்சிதான்.