2 மாநகராட்சிகளை எதிர்பார்க்கும் ஜி.கே.வாசன்... என்ன செய்யப்போகிறது அதிமுக?
சென்னை: அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு உள்ளாட்சித் தேர்தலில் 2 மாநகராட்சிகளை கேட்டுப்பெறும் முடிவில் உள்ளாராம் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன்.
தஞ்சை, ஈரோடு, ஆகிய இரண்டு மாநகராட்சிகளை அதிமுகவிடம் இருந்து பெறுவதற்காக ஜி.கே.வாசன் தூது விட்டு வருகிறாராம்.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு இம்மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதால் கூட்டணிக் கட்சிகள் இப்போதே அதிமுகவிடம் பட்டியல் அளித்து வருகின்றன.
மனைவியை நடுரோட்டில் கோடாரியால் வெட்டி கொன்றுவிட்டு.. தப்பிய 40 வயது நபரை அடித்தே கொன்ற கும்பல்
2016-ல் நடந்த நிகழ்வு
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் கடந்த 2016-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்து பேசினார். இது அரசியலில் பெரிய நிகழ்வாக கருதப்பட்டதுடன், வாசன் திமுக கூட்டணியில் இணைய உள்ளதாகவும் பேசப்பட்டன. ஆனால் அப்போது உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை என்பதும், நீதிம்னறம் ரத்து செய்ததும் குறிப்பிடத்தக்கது.
அதிமுக ஆதரவு
மு.க.ஸ்டாலினை தாம் தேடி வந்து சந்தித்து பேசியதை, வாசனுக்கு வழியில்லாமல் நம்மிடம் வருகிறார் என திமுகவினர் விமர்சித்து பேசியது வாசனின் சுயமரியாதையை உரசிப் பார்த்தது. இதனால் திமுகவுடன் இணைய வேண்டும் என்ற எண்ணத்தை அப்போது உதறித்தள்ளினார்.
நட்பு பாராட்டு
இதனிடையே தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் (தொட்டியம் ராஜசேகரன், சாருபாலா தொண்டைமான், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், மகேஸ்வரி, ) உள்ளிட்ட பலரையும் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அதிமுகவில் இணைத்தார். இதனால் கட்சி கரைவதை கண்ட ஜி.கே.வாசன் அதிமுக மீதும் கோபம் கொண்டார். ஆனால் காலப்போக்கில் அதிமுக மீதான கோபத்தை தணித்து அந்தக் கட்சியுடன் மெதுவாக நட்பு பாராட்டத் தொடங்கினார்.
கூட்டணியில் இடம்
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.ஆகிய இருவரும் ஜி.கே.வாசனுக்கு உரிய மரியாதை அளித்து அவரை அதிமுக கூட்டணிக்குள் கொண்டு வந்து இன்று வரை தக்கவைத்து வருகின்றனர். கடந்த மக்களவைத் தேர்தலில் தஞ்சை தொகுதியை த.மா.கா.வுக்கு ஒதுக்கினர். மேலும், வாசனுக்கு இருக்கும் மிஸ்டர் கிளீன் இமேஜை கணக்கச்சிதமாக பயன்படுத்திக் கொள்கின்றனர் அவர்கள்.
2 மாநகராட்சிகள்
உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் த.மா.கா. தொடரும் என வாசன் அறிவித்துள்ள நிலையில், 2 மாநகராட்சிகளை அதிமுகவிடம் இருந்து கேட்டு வாங்கும் திட்டத்தில் இருக்கிறார் வாசன். ஈரோடு மாநகராட்சியை தனது தீவிர ஆதரவாளரும், த.மா.க. இளைஞரணித் தலைவருமான யுவராஜுக்கும், தனது சொந்த மாவட்டமான தஞ்சையையும் பெறும் முடிவில் இருக்கிறார் வாசன்.
முடிவில்லை
அதிமுக தரப்பில் இருந்து இன்னும் கூட்டணிக் கட்சிகளிடம் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாகவும், இடப் பங்கீடு தொடர்பாகவும் எதுவும் பேசப்படவில்லையாம்.