காலையில் திடீர் குழப்பம்.. அழைத்த அதிமுக.. பழசை மறக்க முடியாமல் தவிக்கும் வாசன்!
Recommended Video
- கோயா
சென்னை: புதன்கிழமை காலையில் தமிழ் மாநில காங்கிரஸ் தரப்பில் திடீர் சலசலப்பு ஏற்பட்டு விட்டது. அதிமுகவிலிருந்து கூட்டணி குறித்து பேச அழைப்பு வந்த நிலையில் திமுகவிலிருந்தும் அன்புக் கட்டளை வந்து சேர்ந்ததாம்.
இதனால் குழம்பிப் போன வாசன், அதிமுகவுடன் நாங்கள் பேசவில்லை என்று ஒரு விளக்கம் அளிக்கும் நிலை ஏற்பட்டு விட்டது. தமிழக அரசியலில் மட்டுமல்லாமல் இந்திய அரசியலிலும் எவ்வித குற்றச்சாட்டுக்கும் ஆளாகாத மிஸ்டர் கிளீன் இமேஜ் உடையவர் ஜி.கே.வாசன்.
அவர் நடத்தும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அதிமுகவுடன் இன்று கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகிய நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்து அவசரம் அவசரமாக விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளார் வாசன்.
தவறான செய்தி
விடியல் சேகர் பெயரில் வந்துள்ள அந்த அறிக்கையில், த.மா.கா. அதிமுக கூட்டணி பேச்சு என்பது உண்மைக்கு புறம்பானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைவைத்து பார்த்தால் அதிமுக கூட்டணியை ஜி.கே.வாசன் விரும்பவில்லை எனத் தெரிகிறது. அதற்கு காரணம் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக நம்ப வைத்து கழுத்தை அறுத்ததை வாசன் மறக்கவில்லையாம்.
திமுக பக்கம் போகலாம்
இதனால் சீட் முன்னபின்ன இருந்தாலும், போட்டியிட வாய்ப்பு இல்லை என்றாலும் திமுக ஆதரவு நிலைப்பாட்டை வாசன் எடுப்பார் என்கிறார் த.மா.கா.முக்கிய நிர்வாகி ஒருவர். அதிமுக, திமுக, அமமுக என மூன்று தரப்புமே வாசனை இணைத்துக்கொள்ள பல்வேறு வழிகளில் முயற்சி செய்து வருவது உண்மையாம்.
2 நாட்களாக ஆலோசனை
கடந்த 2 நாட்களாக மூத்த நிர்வாகிகளோடு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளாராம் வாசன். திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருப்பதால் அதில் சேர வாசனுக்கு சற்று நெருடல் உள்ளதாம். ஆனால் திமுக தரப்பில் பேசியவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் உரிய முக்கியத்துவம் அளிக்கிறோம் என வாசனிடம் வாக்குறுதி அளிக்கிறார்களாம்.
தினகரனிடம் சேர அழைப்பு
இதனிடையே ஜி.கே.வாசனை அமமுகவுடன் சேருமாறு ஒரு சிலரும், வேண்டாம் கட்சியின் எதிர்காலம் கருதி திமுக கூட்டணியில் இணைய வேண்டும் என ஒரு தரப்பும் வலியுறுத்துவதால் வாசன் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளாராம். மொத்தத்தில் சும்மா இருந்த ஜி.கே.வாசன் பிசியாகி விட்டார்.. அதாவது என்ன முடிவு எடுப்பது என்ற யோசனையில்.