உடல் நலக்குறைவால் காலமானார் ஜி.கே.வாசனின் தாயார் கஸ்தூரி மூப்பனார்.. நாளை மாலை இறுதி சடங்கு
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் நிறுவனர் மறைந்த மூப்பனாரின் மனைவியும், அக்கட்சியின் தற்போதைய தலைவருமான ஜி.கே.வாசனின் தாய் கஸ்தூரி மூப்பனார், உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.இவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மறைந்த ஜி.கே.மூப்பனாரின் மனைவியான 88 வயதான கஸ்தூரி அம்மாள், கடந்த சில நாட்களாக முதுமையின் காரணமாக உடல் நலக்குறைவால் கடுமையாக அவதிப்பட்டு வந்தார்.
இதனையடுத்து உடல் நலக்கோளாறு காரணமாக கஸ்தூரி அம்மாள் கடந்த 1 வாரமாக , சென்னை கீழ்பாக்கம் பதுதியிலுள்ள தனியாா் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கஸ்தூரி அம்மாளின் உயிர், இன்று காலை மருத்துவமனையில் பிரிந்தது. இது குறித்து தகவல் அறிந்த முதல்வா் பழனிசாமி, துணைமுதல்வா் பன்னீா்செல்வம் உள்ளிட்டோர் சென்னை கீழ்ப்பாக்கம் வி.எஸ். மருத்துவமனையில் இருந்த கஸ்தூரி மூப்பனார் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தனர். தொடர்ந்து திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளா் வைகோ, முன்னாள் மதிய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பல அரசியல் தலைவா்கள் நேரில் வந்து, கஸ்தூரி அம்மாளின் உடருக்கு அஞ்சலி செலுத்தினர்..
பின்னர் ஜிகே வாசனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். இந்நிலையில் மறைந்த கஸ்தூரி அம்மாளின் உடல் அவரது சொந்த ஊரான கும்பகோணத்திற்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது. அங்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது உடல் வைக்கப்படுகிறது.
பின்னர் நாளை மாலை கும்பகோணம் அருகேயுள்ள சுந்தரப்பெருமாள்கோவில் கிராமத்தில், கஸ்தூரி அம்மாளின் இறுதி சடங்குகள் நடைபெற உள்ளது.