அதிமுகவிடம் 12 தொகுதிகள் கேட்கும் தமாகா- நாளை 2- கட்ட பேச்சுவார்த்தை
சென்னை: அதிமுக கூட்டணியில் 12 தொகுதிகளை கேட்டு தமிழ் மாநில காங்கிரஸ் இன்று முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. 2-ம் கட்டமாக நாளையும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
அதிமுக அணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாமகவை விட கூடுதல் தொகுதிகளை கேட்கிறது தேமுதிக. பாமகவை விட 2 மடங்கு கூடுதல் தொகுதிகள் கேட்கிறது பாஜக.
சசிகலா- எடப்பாடியார்; மமதா- கங்குலி; நிதிஷ்- சிராக் பாஸ்வான். உள்ளூர் தலைகளை மோதவிடும் பாஜக பாணி
தமாகா பேச்சுவார்த்தை
இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள தமாகாவுடன் இன்று தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அமைச்சர் வேலுமணி இல்லத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் தமாகா துணைச் செயலாளர் கோவை தங்கம் வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
12 இடங்கள் கேட்கும் தமாகா
சுமார் ஒரு மணிநேரம் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது 12 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என தமாகா நிர்வாகிகள் வேணடுகோள் விடுத்தனர்.
கிடைப்பது எத்தனை?
அதிமுக அணியில் தமாகா ஏற்கனவே ராஜ்யசபா சீட் பெற்றிருக்கிறது. இதனால் தமாகா கேட்கும் 12 தொகுதிகளை அதிமுக கொடுக்குமா? என்பது சந்தேகம்தான். அதிகபட்சம் 6 அல்லது 8 தொகுதிகள் தமாகாவுக்கு கிடைக்கலாம்.
2-ம் கட்ட பேச்சுவார்த்தை
இந்த பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய தமாகாவின் கோவை தங்கம், இன்று முதல் கட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளது. 2-ம் கட்டமாக நாளை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது என்றார்.