ஐயா.. இலவசம் இலவசம்னா.. தேச வளர்ச்சிக்கு என்ன திட்டம் இருக்கு.. இளைஞர்கள் சுளீர்
சென்னை: நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இலவசம், இலவசம் என்றால், இந்த தேச வளர்ச்சிக்கு என்ன திட்டம் இருக்கிறது என இளைய தலைமுறையினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஆட்சியைப் பிடிப்பதற்காக அரசியல் கட்சிகள் பல்வேறு வாக்குறுதிகளையும் மக்கள் மத்தியில் அள்ளிவீசி வருகின்றனர். இதனால் பொருளாதார சீர்குலைவு ஏற்படும் அபாயம் உள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இலவச திட்டங்களுக்கு பதிலாக சிறு வேலைகளை கொடுக்கும் விதமான திட்டங்களை அறிவித்தால், நாடு வளர்வதுடன் தனிமனித வருமானமும் பெருகும் என இளைய தலைமுறையினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
8 வழி சாலை தீர்ப்பு எல்லாருக்கும் சொந்தம்தான்.. ஆனால் "விதை" நாம் தமிழர் போட்டது!
இலவச திட்டம்
இலவசத் திட்டங்கள் என்பது அண்ணாதுரை காலத்திலிருந்தே தொடங்கியதாகவும், அப்போது நிலவிய அரிசி பஞ்சம், தேர்தலுக்காக பயன்படுத்தபட்டது. அப்போது தொடங்கிய இலவசம், இன்று வரை தமிழகத்தை விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறது.
கவர்ச்சித் திட்டங்கள்
தேர்தலில் பல்வேறு தேசிய மற்றும் மாநில கட்சிகள் பொருளாதாரம் சார்ந்த வாக்குறுதிகளை முதன்மை ஆயுதங்களாக பயன்படுத்துகின்றனர். தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஏழை குடும்பங்களுக்கு மாதம் 6,000 ரூபாய், ஆண்டுக்கு 6,000 ரூபாய் வழங்கப்படும், விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் உள்ளிட்ட கவர்ச்சிகரமான திட்டங்களை தேசிய கட்சிகள் அறிவித்துள்ளன.
மக்களாட்சி
மக்களாட்சியில் அரசின் கடமை என்பது மக்கள் தாங்களே தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் அளவிற்கு அவர்களுக்கு வளர்ச்சிக்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது தான் . இரண்டாம் உலகப் போருக்கு முன் அமெரிக்காவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டது. அப்போது சாலை போடுவது, பொது சுவர்களுக்கு வெள்ளை அடிப்பது, கேளிக்கை நிகழ்ச்சிகள் போன்ற சிறிய வேலைகளும், எளிய ஊதியமும் கூட கடின காலத்தில் மக்களுக்கு உதவின. அதே போன்ற புதுமையான திட்டங்களை உருவாக்க வேண்டும் என்பது மாணவர்களின் கருத்தாக உள்ளது.
வலியுறுத்தல்
அதே நேரத்தில், இந்தியாவில் செயல்படுத்தப்பட்ட 100 நாள் வேலைத் திட்டத்தால் விவசாயம் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டதை தவிர, வேறு என்ன சொல்ல முடியும் எனக்கூறும் இளைய தலைமுறையினர், ஏழைகளுக்கு பணம் தருவதாக, வாக்குறுதி அளிக்கும் கட்சிகள் அந்த பணத்திற்கு உரிய, சிறிய வேலைகளை, கொடுப்பது அவசியம் என வலியுறுத்தி உள்ளனர்.
நாட்டின் உள்கட்டமைப்பு
மக்களுக்கு உதவி செய்யத்தான் அரசு உள்ளது. அதே நேரத்தில் தேசத்தை மாற்றும் கடமையும் அரசுக்கு உள்ளது. இதை அரசியல் கட்சிகள் கருத்தில் கொள்ளவேண்டும். தற்போது மக்களின் வாழ்க்கையும், நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் ஒரு சிறந்த திட்டம் பிரதான தேவை. அப்படிப்பட்ட எந்தத் திட்டமும் இல்லாமல் பணத்தை கொடுப்பதை மட்டுமே கட்சிகள் திட்டமாக கூறினால், அது இந்தியாவின் உற்பத்தியையும், இந்தியாவின் தொழில் திறனையும் பாதிக்க வாய்ப்புள்ளது.
நாட்டின் உற்பத்தி
சில நூறு ஆண்டுகளுக்கு முன் உலகின் ஒட்டுமொத்த உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 27%. தற்போது 3 சதவீதம் கூட இல்லை. எதிர்காலத்தில் அது எத்தனை சதவீதம் ஆகும் என்பதை கணிக்க முடியவில்லை. உற்பத்திப் பெருக்கம் கருதி, பொருளாதார வாக்குறுதிகளை ஓட்டுக்காக இல்லாமல், நாட்டை மாற்ற, அரசியல் கட்சிகள் முன்வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.