சிறு, குறு தொழிலதிபர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ரூ.75 லட்சம் வரையிலான வர்த்தகத்திற்கு ஜிஎஸ்டி விலக்கு?
சென்னை: ரூ.75 லட்சம் வரையிலான வர்த்தகம் கொண்ட நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னையில், இன்று, அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டி: தமிழகத்தில் நவீன உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. 1991-96ம் ஆண்டு காலகட்டம், 2001-06 கால கட்டத்திலும், 2011-16ம் ஆண்டு காலகட்டத்திலும், ஜெயலலிதா ஆட்சி காலத்தில் பல முதலீடுகள் ஈர்க்கப்பட்டன.
முதலீட்டாளர்கள் 3 விஷயங்களை எதிர்பார்ப்பார்கள். மாநிலம் அமைதியாக உள்ளதா என்று பார்ப்பார்கள். தமிழகம் அமைதியாக உள்ளது. அடிப்படை கட்டமைப்பு வசதிகள் நிறைவு பெற்றுள்ளதா? ஒற்றை சாளர முறையில் உடனடியாக, தொழில் துவங்க அனுமதி கிடைக்குமா என்றும் பார்ப்பார்கள். தமிழகம் அப்படியான நிலையில் உள்ளதால் முதலீட்டாளர்கள் அதிகம் தமிழகம் வருகிறார்கள்.
தமிழகத்தில் ஜனவரி 23, 24ம் தேதிகளில் சர்வதேச முதலீட்டாளர் மாநாடு நடைபெற உள்ளது. கடந்த முதலீட்டாளர் மாநாட்டில் 2.5 லட்சம் கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. சுமார் 1 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. 2015ல் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், 16533 சிறு, குறு நிறுவனங்கள் மட்டும், 10,000 புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுக்கொண்டுள்ளனர்.
ஜிஎஸ்டி வரியிலிருந்து சிறு குறு தொழில்களை காப்பாற்ற வேண்டும் என்று தமிழக அரசுதான் அதிக அழுத்தம் கொடுத்தது. இந்த அடிப்படையில்தான், வரும் ஜனவரி மாதம் முதல் ஜிஎஸ்டியில் பல சலுகைகள் கிடைக்க உள்ளன. 75 லட்சம் வரையிலான வர்த்தகம் உள்ள நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்க கேட்டுக்கொண்டுள்ளோம். ஜனவரி மாதம் முதல் இந்த நல்ல முடிவை மத்திய அரசு எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்தார்.