உலக முதலீட்டாளர்கள் மாநாடு.. முதல்நாள் செய்யப்பட்ட முதலீடு எவ்வளவு தெரியுமா?
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் நேற்று சுமார் 90,000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வருகிறது.
சென்னை: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் நேற்று சுமார் 90,000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வருகிறது.
சென்னை நந்தம்பாக்கத்தில் தற்போது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்து வருகிறது. தமிழக அரசு சார்பாக இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று தொடங்கிய மாநாடு இன்று மாலை வரை நடக்கிறது. சுமார் 2.55 லட்சம் கோடி ரூபாய்க்கு இந்த மாநாடு மூலம் முதலீடு பெறப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
அதிகம் யார்
இந்த மாநாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு என்றாலும் கூட, உள்நாட்டை சேர்ந்த நிறுவனங்கள்தான் அதிகம் கலந்து கொண்டது. உள்நாட்டை சேர்ந்த நிறுவனங்கள்தான் நேற்று அதிக அளவில் முதலீடுகளையும் செய்தது. ஏற்கனவே தமிழகத்தில் முதலீடு செய்திருக்கும் நிறுவனங்கள் மேலும் முதலீடு செய்தது குறிப்பிடத்தக்கது.
எந்த நிறுவனம்
ஹூண்டாய், அதானி, இந்தியன் ஆயில் போன்ற நிறுவனங்கள் அதிக முதலீடுகளை தமிழகத்தில் செய்துள்ளது. அதானி குழுமம், தமிழகம்தான் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு ஏற்ற மாநிலம் என்று குறிப்பிட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.அதேபோல் சியெட் டயர்ஸ், மஹிந்திரா குழுமமும் தமிழகத்தில் முதலீடு செய்துள்ளது.
வெளிநாட்டு நிறுவனங்கள்
அதேபோல் சில வெளிநாட்டு நிறுவனங்களும் முதல் நாள் மாநாட்டில் முதலீடு செய்தது. ஐபோன் நிறுவனம் சென்னையில் ஐபோன் தயாரிப்பதற்கான அறிவிப்பை நேற்றுதான் வெளியிட்டது. அதேபோல் போர்ட் கார் நிறுவனம் தமிழகத்தில் முதலீடு செய்துள்ளது. பிரபல சால்காம்ப் நிறுவனமும் தமிழகத்தில் முதலீடு செய்துள்ளது.
எவ்வளவு முதலீடு
அதானி குழுமம் 12,000 கோடி ரூபாய், சியெட் டயர்ஸ் 4,000 கோடி ரூபாய், இந்தியன் ஆயில் நிறுவனம் 16,641 கோடி ரூபாய், ஃபோர்டு நிறுவனம் 1,300 கோடி ரூபாய், ஹூண்ட்டாய் கார் நிறுவனம் 7,000 கோடி ரூபாய் என்று முதல் நாளில் 90 ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடுகள் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.பல சிறிய நிறுவனங்களும் இதில் முதலீடு செய்துள்ளது.