திமுகவுடன் சமாதானமாக செல்லுங்கள்.. சண்டை வேண்டாம்.. தமிழக காங்கிரசிடம் பொங்கிய சோனியா!
திமுகவுடன் சமாதானமாக செல்லுங்கள். சண்டை வேண்டாம் என்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறார்.
சென்னை: திமுகவுடன் சமாதானமாக செல்லுங்கள். சண்டை வேண்டாம் என்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறார்.
திமுக - காங்கிரஸ் இடையே நிலவி வரும் பிரச்சனை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. திமுகவை விமர்சித்து அறிக்கை வெளியிட்டது தவறு என்று திமுக எம்பி டி. ஆர் பாலு காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்து பேட்டி அளித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தல் காரணமாக திமுக காங்கிரஸ் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த வாரம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ் அழகிரி கோபமாக அறிக்கை வெளியிட்டு இருந்தார். உள்ளாட்சி தேர்தலில் போதிய இடங்களை திமுக எங்களுக்கு அளிக்கவில்லை.ஒன்றியத்திற்கு, மாவட்டத்திற்கு தலைவர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம், என்றார்.
துக்ளக் வார இதழ் பொன்விழா நிகழ்ச்சி.. கறுப்பு உடையுடன் வர தடை
என்ன மோசம்
மேலும் திமுக எங்களுக்கு எதுவும் செய்யவில்லை. எங்களிடம் தருவதாக வாக்களித்த இடங்களை கூட திமுக எங்களுக்கு வழங்கவில்லை. மாவட்ட அளவில் பேசிமுடித்த எந்த ஒரு ஒத்துழைப்பும் இதுவரை கிடைக்கவில்லை என கூறப்பட்டுள்ளது. திமுகவின் செயல்பாடுகள் கூட்டணி தர்மத்திற்கு புறம்பாக இருந்தது என்று கே.எஸ் அழகிரி குறிப்பிட்டு இருந்தார்.
என்ன பிளவு
இவரின் இந்த கருத்து காரணமாக திமுக - காங்கிரஸ் கோட்டையில் பெரிய பிளவு ஏற்பட்டு இருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு இந்தியாவில், எந்த எதிர்பார்ப்பும் இன்றி நட்பாக இருக்கும் ஒரே கட்சி திமுகதான். பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, இடதுசாரிகள், தேசியவாத காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இருந்தால் திமுக அளவிற்கு அவர்கள் யாரும் நெருக்கம் கிடையாது.
ராகுல் பாசம்
கடந்த லோக்சபா தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தது, முதலில் திமுக தலைவர் ஸ்டாலின்தான். தமிழகத்திலும் லோக்சபா தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களை வென்றது. ராகுல் காந்திக்கும், சோனியா காந்திக்கும் திமுக உடன் நல்ல நெருக்கம் நிலவி வருகிறது.
என்ன கூட்டணி
வருகின்ற சட்டசபை தேர்தலிலும் கூட திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் தற்போது திமுக மீது தமிழக காங்கிரஸ் தேவையில்லாமல் விமர்சனம் வைத்துள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் இடம் கொடுக்கவில்லை என்று காங்கிரஸ் கூறியது பெரிய சர்ச்சையாகி உள்ளது.
கலந்துகொள்ளவில்லை
இதனால் நேற்று காங்கிரஸ் சார்பாக நடைபெற்ற எதிர்க்கட்சி கூட்டத்தில் திமுக கலந்து கொள்ளவில்லை. முதல்முறை திமுக காங்கிரஸ் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ளாமல் அதை தவிர்த்து உள்ளது. இது டெல்லி காங்கிரஸ் தலைவர்களையும், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாவையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
என்ன கோபம்
இன்று டெல்லியில் இதனால் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரியை சோனியா காந்தி சந்தித்து பேசினார். இதில் சோனியா காந்தி தமிழக காங்கிரஸ் மீது கடுமையான விமர்சனங்களை வைத்ததாக கூறப்படுகிறது. திமுகவுடன் சமாதானமாக செல்லுங்கள். சண்டை வேண்டாம் என்று சோனியா காந்தி அறிவுறுத்தி இருக்கிறார்.
சமாதானம் செய்யுங்கள்
இது தொடர்பாக உடனடியாக ஸ்டாலினிடம் பேசி சமாதானம் ஆகுங்கள். நானும் ஸ்டாலினுடன் பேசுகிறேன் என்று சோனியா காந்தி கூறியுள்ளார். அதேபோல் திமுகவுடன் பிரச்சனை இருந்தால் பேசி தீருங்கள், தேவையில்லாமல், அறிக்கை எல்லாம் வெளியிட வேண்டாம் என்று சோனியா அறிவுரை வழங்கி உள்ளார்.
சண்டை இல்லை
இதன் பின்தான் கே.எஸ் அழகிரி, திமுக உடன் சண்டை இல்லை. கூட்டணி தொடரும் என்று பேட்டி அளித்தார். ஆனால் இன்னும் திமுக இதில் சமாதானம் ஆகவில்லை என்று கூறுகிறார்கள். திமுக இன்னும் கோபத்தில்தான் இருக்கிறது. ஸ்டாலின் வெளியே வந்து பேட்டி கொடுக்கும் வரை இந்த பிரச்சனை முடிவிற்கு வராது என்று கூறுகிறார்கள்.