கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்திற்கு ராமதாஸ் வரவேற்பு.. விரைந்து செயல்படுத்தவும் வலியுறுத்தல்
சென்னை: கோதாவரி - காவிரி நதிகள் இணைப்பு திட்டத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். பாமகவின் கனவுத்திட்டமான இதனை நிறைவேற்ற மத்திய அரசு முன்வந்திருப்பது வரவேற்புக்குரியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிதின் கட்கரி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் எனது முதல் பணி கோதாவரி ஆற்றை கிருஷ்ணா ஆற்றுடன் இணைப்பது, கிருஷ்ணா ஆற்றை காவிரியுடன் இணைப்பது, அதன்மூலம் கோதாவரி ஆற்றில் வீணாக கடலில் கலக்கும் நீரை தமிழ்நாட்டின் கடைமடைப் பாசனப் பகுதிகளுக்கு கொண்டு செல்வது என கூறியுள்ளார். தமிழகத்தின் மீதான அவரது அக்கறை பாராட்டத்தக்கது என ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்திற்கு தண்ணீர் பெற்றுத் தர கோதாவரி -காவிரி இணைப்புத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தவிருப்பது தனிப்பட்ட முறையில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு கிடைத்த வெற்றி. மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைவதற்கு பா.ம.க. முன்வைத்த 10 கோரிக்கைகளில் கோதாவரி - காவிரி இணைப்பு திட்டமும் ஒன்று.
இத்திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுக்க மத்திய அரசு முன் வந்திருப்பது தமிழகத்திற்கு கிடைக்கும் மிகப்பெரிய நன்மை. 1970-ம் ஆண்டுகளில் இந்திரா காந்தி ஆட்சியின் போதே கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம் முன்வைக்கப்பட்டது. ஆனால் அத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் கூட அப்போது நடத்தப்படவில்லை. இந்தத் திட்டம் காய்ந்த பூமியான தமிழகத்தை பசுமை பூமியாக மாற்றும்.
50 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த இத்திட்டத்திற்கு இப்போது செயல்வடிவம் கொடுக்க மத்திய அரசு முன்வந்துள்ளது. இத்திட்டம் தமிழ்நாட்டின் வேளாண் தேவையை மட்டுமின்றி, குடிநீர் தேவையையும் நிறைவேற்றும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், தமிழகத்திற்கு காவிரியில் ஆண்டுக்கு குறைந்தது 200 டி.எம்.சி தண்ணீர் கூடுதலாக இருக்கும். தமிழகத்தின் வேளாண்மை வளர்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் துணையாக இருக்கும்.
இன்னும் 20 நாள்தான்.. சென்னைக்கு காத்திருக்கும் மாபெரும் தண்ணீர் பஞ்சம்.. அதிர வைக்கும் அலெர்ட்!
தமிழக நன்மைக்கான இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் பழனிச்சாமியும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தார். மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் மத்தியில் மோடி அரசு மீண்டும் அமைய உள்ள நிலையில், அதன் முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் பெற வேண்டும். உலக வங்கி அல்லது ஆசிய வளர்ச்சி வங்கியிடம் நிதி பெற்று இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
மேலும் கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த மத்திய, மாநில அரசுகளுடன் இணைந்து பாட்டாளி மக்கள் கட்சியும் நடவடிக்கை எடுக்கும் என அறிக்கையில் கூறியுள்ளார்.