அம்மா மட்டும் இருந்திருந்தா.. ராஜன் செல்லப்பா வாயைத் திறக்க முடியமா.. கோகுல இந்திரா ஆவேசம்
Recommended Video
சென்னை: அம்மா இல்லாததால் ராஜன் செல்லப்பா ஊடகங்கள் வாயிலாக கட்சிப் பிரச்சினை குறித்துப் பேசியுள்ளார். அம்மா இருந்திருந்தால் அவரால் இப்படிப் பேசியிருக்க முடியுமா என்று முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா கேட்டுள்ளார்.
அதிமுகவில் புதிய பூசல் வெடித்துள்ளது. மதுரை வடக்குத் தொகுதி சட்டசபை உறுப்பினர் ராஜன் செல்லப்பா கட்சிக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தியுள்ளார். தனது கோரிக்கையில் உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதற்காக தன்னை அதிமுகவிலிருந்து நீக்கினாலும் தனக்குக் கவலை இல்லை என்றும் ராஜன் செல்லப்பா கூறியுள்ளார். இதுகுறித்து முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவிடம் கருத்துக் கேட்டபோது அவர் கூறியதாவது:
முறையற்ற குற்றச்சாட்டு
இது முறையற்ற குற்றச்சாட்டு. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இரட்டை அதிகாரம் இருப்பதாக இப்போது சொல்லும் இவர், அந்த பதவிகளுக்கு இருவரையும் நியமித்தபோது ஏன் எதிர்க்கவில்லை. அப்போதே எதிர்த்திருக்கலாமே.
இத்தனை நாளா ஏன் பேசலை
இத்தனை நாட்களாக அமைதியாக இருந்து விட்டு இப்போது இப்படிச் சொல்ல என்னக் காரணம். அம்மா இல்லாததால் இப்படிப் பேசியுள்ளார். அம்மா இருந்திருந்தால் இவரால் வாயைத் திறந்திருக்க முடியுமா.
அம்மா குறை வைக்கலையே
இவருக்கு அம்மா என்ன குறை வைத்தார். மாவட்டச் செயலாளராக்கினார், எம்எல்ஏ பதவி கொடுத்தார், மதுரை மாநகராட்சி மேயர் பதவி கொடுத்தார். அவரது மகனுக்கும் எம்பி சீட் இப்போது கொடுத்தாங்க. இத்தனை கொடுத்தும் எப்படி இவரால் இப்படிப் பேச முடிகிறது என்று தெரியவில்லை.
அம்மா சமாதி
9 எம்எல்ஏக்கள் அம்மா நினைவிடத்திற்குப் போகவில்லை என்று கூறுகிறார். அப்படியெல்லாம் இல்லை. யாரும் யாரையும் தடுக்கவில்லை. அவரவர் செல்லத்தான் செய்கிறார்கள், செல்வார்கள்.
பலபப்டுத்துங்க
இதுபோல ஊடகங்களிடம் பேசி கட்சியை பலவீனப்படுத்துவதை விட்டு விட்டு கட்சிக்கு பலம் சேர்க்கும் வகையில் ராஜன் செல்லப்பா செயல்பட வேண்டும். உட்கட்சி விவகாரங்களை ஊடகங்கள் மூலம் பேசியது தவறு. அவர் கட்சித் தலைமையிடம்தான் பேசியிருக்க வேண்டும் என்றார் கோகுல இந்திரா.
உடையுமா கட்சி
ராஜன் செல்லப்பாவின் பேட்டியால் அதிமுகவில் புதிய புயல் வீசியுள்ளது. பலரும் சரமாரியாக கருத்துக்களைக் கூறி வருகின்றனர். செல்லப்பாவுக்கு சாதகமாக சிலரும், எதிராக சிலரும் கருத்து கூறி வருவதால் கட்சி மீண்டும் பிளவுபடுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.