கோகுல்ராஜ் கொலை வழக்கு:அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆய்வு.. அதிரடி திருப்பம்
சென்னை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக சுவாதி மாறிய நிலையில் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தற்போது குழப்பம் நிலவும் நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இன்று திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். கோவிலில் கோகுல்ராஜ்-சுவாதி அமர்ந்து பேசிய இடங்கள், சிசிடிவி கேமராக்களை நீதிபதிகள் ஆய்வு செய்தனர். இதன்மூலம் இந்த வழக்கு முக்கிய கட்டத்தை எட்டி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர், கோகுல்ராஜ். பொறியியல் படித்து வந்தார். இவரும் சுவாதி என்பவரும் பழகி வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். கடந்த 2015ல் ஜூன் மாதம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு கோகுல் ராஜ், சுவாதி ஆகியோர் சென்றனர்.
அதன்பிறகு கோகுல்ராஜ் வீடு திரும்பவில்லை. கோகுல்ராஜ் கோவிலில் இருந்து கடத்தி கொலை செய்யப்பட்டார். கிழக்கு தொட்டிபாளையம் தண்டவாளம் அருகே அவரது உடல் கிடந்தது. இது ஆணவக்கொலை என கூறப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிரடி! கோகுல்ராஜ் கொலை வழக்கில் அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் விசிட்..ஏன்?
10 பேருக்கு ஆயுள் தண்டனை
இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். யுவராஜ் உள்பட 10 பேருக்கு மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. இந்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். இதேபோல் கோகுல்ராஜின் தாயார் சித்ரா மற்றும் சிபிசிஐடி தரப்பில் வழக்கில் 5 பேர் விடுதலை செய்ததை எதிர்த்து மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
பிறழ் சாட்சியாக சுவாதி
இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்எஸ்ரமேஷ் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு விசாரித்தது. சுவாதி ஆஜரானார். பிறழ் சாட்சியாக மாறிய சுவாதியிடம் நீதிபதிகள் கேள்விகள் கேட்டனர். அதற்கு அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். சிசிடிவியில் உள்ள பெண் அவராக இருந்தும் கூட அதனை சுவாதி மறுத்தார். உண்மையை சொல்ல சுவாதி மறுப்பதாக நினைத்த நீதிமன்றம் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப்பதிவு செய்தது.
நீதிபதிகள் அதிரடி
இந்நிலையில் நீதிபதிகள் எம்எஸ் ரமேஷ், என் ஆனந்த் வெங்கடேஷ் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டனர். தற்போது அங்கிருந்து எம்எஸ் ரமேஷ், ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு வழக்கை தொடர்ந்து விசாரித்து வருகிறது. இந்நிலையில் தான் கோகுல்ராஜ்-சுவாதி சென்ற திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சென்று ஸ்பாட் விசிட் செய்வதாக நீதிபதிகள் அறிவித்தனர். கோவில் உள்ளே வரும் வழி, வெளியே வரும் வழி பற்றி புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளதாலும், போலீசார் சிசிடிவி காட்சிகளை சரியாக ஆய்வு செய்யாமல் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டாலும் நீதிபதிகள் இந்த முடிவை எடுத்தனர்.
நீதிபதிகள் ஆய்வு - விசாரணை
அதன்படி இன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சென்று ஸ்பாட் விசிட் செய்தனர். கோவிலில் கோகுல்ராஜ், சுவாதி அமர்ந்து பேசிக் கொண்டிருந்த இடங்களை நீதிபதிகள் பார்வையிட்டனர். மேலும் சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்தனர். குறிப்பாக கோவிலின் மேற்குவாயில், கொடிமரம், ராஜகோபுரம் உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவிகளை நீதிபதிகள் பார்வையிட்டனர். மேலும் கோகுல்ராஜ் மற்றும் சுவாதி கோவிலுக்கு சென்ற ஆண்டில் உதவி ஆணையராக இருந்த சூரியநாராயணன் மற்றும் ஹார்ட்டிஸ்க்கை போலீசாரிடம் ஒப்படைத்த தங்கவேல் உள்ளிட்டவர்களிடம் நீதிபதிகள் விசாரணை நடத்தினர். இதனால் கோகுல்ராஜ் கொலை வழக்கு புதிய திருப்பத்தை சந்தித்துள்ளது.